டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த சில வாரங்களாக நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் போன்ற முக்கியப் பிரச்சினைகளை வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடைபெற்று வந்த மாபெரும் தொடர் போராட்டம் இன்று அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் தேர்வு விவகாரத்தில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முன்னெடுத்த இந்த போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
கடந்த மே மாதம் 5-ந் தேதி நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், தேர்வு ரத்து செய்யப்பட்டது. பின்னர், நீட் தேர்வுக்கான மறுதேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இருப்பினும், நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்தக் கோரிக்கையை மையமாக வைத்து, கடந்த மாதம் (ஜூன்) 20-ந் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தங்களது போராட்டத்தைத் தொடங்கினர்.
இதற்கிடையே, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் நாடாளுமன்றத்தை நோக்கி 'சலோ சன்சாத்' என்ற பெயரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஒரு பேரணியை முன்னெடுத்தனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதிலும் இருந்து சுமார் 20 ஆயிரம் பேர் டெல்லி ஜந்தர் மந்தரில் குவிந்தனர். போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், மத்திய அரசின் மீது அழுத்தம் கூடியது.
தொடர்ந்து போராட்டம் நடைபெற்ற வந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். இது போராட்டக்காரர்களுக்கு ஒரு முக்கிய வெற்றியாகக் கருதப்பட்டது. இந்த ராஜினாமாவைத் தொடர்ந்து, மத்திய அரசுடன் சிஜேபி கட்சியினர் மூன்று கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். இந்தப் பேச்சுவார்த்தைகளில், டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது பதியப்பட்டிருந்த வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்றும், நீட் தேர்வு ரத்தால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.
தர்மேந்திர பிரதான் ராஜினாமாவைத் தொடர்ந்து, சிஜேபியின் பிற முக்கிய கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மத்திய அமைச்சர்கள் மற்றும் சிஜேபியினர் கூட்டாக ஒரு அறிவிப்பை வெளியிட்டனர். அதில், மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையில் தங்களின் மூன்று முக்கிய கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்பதாக உறுதி அளித்ததன் அடிப்படையில், நாடு முழுவதும் நடைபெறும் மாணவர் போராட்டங்களை வாபஸ் பெறுவதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது. மத்திய அரசுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நான்கு வாரங்களில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் அஷுதோஷ் ரங்கா கூறுகையில், 'நாங்கள் அரசாங்கக் குழுவினருடன் மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். பல நாட்களாக ஜந்தர் மந்தரில் நடைபெற்று வந்த எங்கள் போராட்டத்தில் மூன்று முக்கிய கோரிக்கைகள் வைக்கப்பட்டன. முதலாவதாக, தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். இரண்டாவதாக, போராட்டக்காரர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து சட்ட வழக்குகளும் திரும்பப் பெறப்பட வேண்டும், மேலும் எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக எந்த வழக்குகளும் பதிவு செய்யப்படக்கூடாது. எங்களின் மூன்றாவது கோரிக்கை, நீட் தேர்வு நடத்தப்படாததால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவது. சற்று முன்புதான் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். இதன் மூலம் எங்கள் முதல் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது' என்றார்.
அஷுதோஷ் ரங்கா மேலும் கூறுகையில், 'கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. எனவே, போராட்டத்தில் ஈடுபடுவோர் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு அமைதியாக வீடு திரும்புமாறு கேட்டுக்கொள்கிறோம். எங்கள் எதிர்காலத் திட்டம் அல்லது பிற விஷயங்கள் குறித்து நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம்' என வேண்டுகோள் விடுத்துள்ளார். நாளை (ஜூலை 26ம் தேதி) நாடு தழுவிய போராட்டத்துக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அழைப்பு விடுத்திருந்த நிலையில், போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதால் நாளை மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நடத்த திட்டமிடப்பட்டிருந்த போராட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
