திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு விழாவில் பங்கேற்ற திமுக எம்.பி கனிமொழி, பேருந்துகள் நின்று செல்லாத இடத்தில் புதிய நிழற்குடை எதற்கு என கேள்வி எழுப்பிய பெண்களிடம், 'நம்ம முதல்வராக இருந்தால் செய்திருப்பேன்' என பதிலளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காயல்பட்டினத்தில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிழற்குடை திறப்பு விழாவில் கனிமொழி கலந்துகொண்டார். அப்போது அங்கு வந்த பெண்கள், நிழற்குடை அமைக்கப்பட்ட இடத்தில் ஏற்கனவே பேருந்துகள் நின்று செல்வதில்லை என்று குற்றம் சாட்டினர். 'பேருந்துகளே நிற்காத இடத்திற்கு புதிய நிழற்குடை எதற்கு?' என கனிமொழியிடம் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த கனிமொழி, 'நம்ம முதல்வராக இருந்தால் செய்திருப்பேன்' என்று சர்ச்சைக்குரிய வகையில் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், கனிமொழியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 'ஆட்சி மாறினாலும், இந்த தொகுதி எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தானே.. சும்மா பஸ் ஸ்டாப் திறந்தா போதுமா? பஸ் நிக்கிறதுக்கு வழி பண்ணுங்க' என ஒரு பெண் ஆவேசமாகக் கூறினார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பேருந்துகள் நின்று செல்லாத பேருந்து நிறுத்தத்திற்கு புதிய நிழற்குடை அமைக்கப்பட்டதன் அவசியம் குறித்து பெண்கள் எழுப்பிய கேள்விக்கு, கனிமொழியின் பதில் மேலும் சர்ச்சையை உண்டாக்கியது.