ஒரு திரைப்படம் வெற்றி பெறும்போது, அதன் பெருமையை அனைவரும் பகிர்ந்துகொள்கிறார்கள். ஆனால், தோல்வியடையும்போது ஒருவரை மட்டும் குறை கூறுவது சரியல்ல என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
‘சிங் கீதம்’ திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், "ஒரு படம் வெற்றி பெற்றால், அந்த அங்கீகாரத்தை எல்லோரும் உரிமை கொண்டாடுகிறார்கள். ஆனால், படம் தோல்வியடையும்போது ஒருவரை மட்டும் குற்றம் சொல்வது சரியாக இருக்காது. அதுபோலவே, படக்குழுவை வைத்து ஒரு படம் நல்ல படமா என்பதை தீர்மானிப்பது சரியல்ல. படத்தின் கருவை அடிப்படையாக வைத்து தீர்மானிப்பதே சரியான முறை" என்று குறிப்பிட்டார்.
மேலும், "அபூர்வ சகோதரர்கள் படத்தின் முதல் 20 நாட்கள் படமாக்கப்பட்ட காட்சிகளை திருப்தி இல்லாததால் கைவிட்டோம். பண இழப்பை பற்றி கவலைப்படாமல், படத்தை சரியாக எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். குள்ள மனிதன் கதாபாத்திரத்திற்காக பல இரவுகள் தூங்காமல் யோசித்திருக்கிறோம். கிளைமாக்ஸ் காட்சிகளை லேப் மாடியிலேயே படமாக்கினோம்" என்றும் அவர் கூறினார்.