பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வரும் தலைமறைவு சாமியார் நித்தியானந்தா, தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் கைலாசா நாட்டு பிரதிநிதிகள், தமிழ்நாடு அரசின் அமைச்சர்களைச் சந்தித்து ராஜரீக உறவுகள் குறித்து பேசியதாக நித்தியானந்தா குறிப்பிட்டிருந்தார். இந்தச் சந்திப்பின் போது, 'யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாசா', 'கைலாசாவின் வரலாறு' ஆகிய புத்தகங்களை அமைச்சர்களுக்கு பரிசாக அளித்ததாகவும், அவை சனாதன தர்மத்தின் மீட்சிக்கும், அதைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் உணர்த்தும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். மேலும், இந்த சந்திப்புகளின் புகைப்படங்களையும் நித்தியானந்தா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தலைமைச் செயலக வட்டாரத்தில் இதுகுறித்து விசாரித்தபோது, நித்தியானந்தா கூறுவது போல எந்த அரசாங்க ரீதியான சந்திப்பும் நடைபெறவில்லை என திட்டவட்டமாக மறுக்கப்பட்டுள்ளது. மனு கொடுப்பதற்காக தினமும் அமைச்சர்களைப் பலர் சந்திப்பதாகவும், அதுபோல வந்தவர்கள்தான் புத்தகத்தைக் கொடுத்து புகைப்படம் எடுத்ததாகவும், வேறு எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர். நித்தியானந்தாவின் பதிவில் உள்ள தகவல்கள் தவறானவை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக பெற்ற வெற்றியின் தொடர்ச்சியாக, அக்கட்சியின் தலைவரான நடிகர் விஜய்க்கு நித்தியானந்தா வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது இந்த புதிய சர்ச்சை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நித்தியானந்தா தனது எக்ஸ் தளப் பதிவில், 'கைலாசாவின் ஆன்மீகத் தூதர்கள், தமிழ்நாடு அரசின் தலை சிறந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் தொடர்ச்சியான அதிகாரப்பூர்வ ராஜதந்திர ஈடுபாடுகளை மேற்கொண்டனர். இந்தச் சந்திப்புகளின் போது, கைலாசாவின் வரலாற்றுப் புத்தகம் மற்றும் காபி டேபிள் புத்தகம் ஆகியவை அமைச்சர்களிடம் வழங்கப்பட்டன. சனாதன தர்மத்தின் மறுமலர்ச்சி மற்றும் அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசும் இந்தப் புத்தகங்கள், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஏ. ஸ்ரீநாத் ஆகியோரிடம் வழங்கப்பட்டது' என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அதிமுக எம்.எல்.ஏ லீமா ரோஸ் மார்ட்டின் மற்றும் நடிகர் டி.எஸ்.ஆர். சீனிவாசன் ஆகியோரின் பெயர்களும் இந்தப் பதிவில் இடம்பெற்றுள்ளன. தலைமைச் செயலகத்திற்கு வரும் பொதுமக்களில் பலர் மனுக்களை அளிப்பதற்காக அமைச்சர்களை நேரில் சந்திப்பது வழக்கம். அப்படிச் சாதாரண மக்கள் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை, 'ராஜதந்திர சந்திப்பு' என்பது போல தவறாகச் சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பியிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளுக்கு நித்தியானந்தாவின் புத்தகங்களுடன் சென்று, முக்கியத் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, பின்னர் அதனைத் தவறான முறையில் விளம்பரப்படுத்துவது கைலாசா பிரதிநிதிகளின் வழக்கமான நடைமுறைதான் என்றும் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் மூலம், தங்கள் நாட்டுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்றுவிடலாம் என அவர்கள் முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.
தலைமைச் செயலக அதிகாரிகள் தரப்பில் இருந்து இந்த மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதால், நித்தியானந்தாவின் கைலாசா சந்திப்பு குறித்த புகார்கள் வெறும் தவறான தகவல்கள் என்பது தெளிவாகியுள்ளது. இது தொடர்பாக மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
