தமிழ்நாட்டின் 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்தில் பங்கேற்பதில் பெருமிதம் கொள்வதாக ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கான டெண்டர் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
ஒரு பைசாவில் செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றைச் சேர்த்து டெண்டர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு பைசாவில் 755 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர்களை ஜோஸ் ஆலுக்காஸின் தாய் நிறுவனமான ஜாய் ஆலுக்காஸ் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்திற்குப் பணி செய்வதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த நான்கு மாதங்களுக்குத் தேவையான ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 499 தங்க மோதிரங்களை பயனாளிகளுக்கு வழங்க, ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இது 70% மற்றும் 30% என்ற சதவீதத்தில் பிரிக்கப்பட்டுள்ளது.
இதில், செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி, போக்குவரத்து ஆகியவற்றின் மதிப்பு ஒரு பைசாவில் மட்டுமே மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த டெண்டர் முறை, விஜய் தலைமையிலான தவெக அரசின் வெளிப்படைத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், இதுகுறித்து ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், 'தமிழ்நாட்டின் 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்தில் இணைந்ததில் எங்களுக்கு லாப நோக்கம் இல்லை. மக்களின் நலனுக்காகவே நாங்கள் இதில் பங்கெடுத்துள்ளோம். இந்த வாய்ப்பை வழங்கிய முதலமைச்சர் விஜய்க்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்' எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், 'வழங்கப்படும் ஒவ்வொரு தங்க மோதிரமும் மிக உயர்ந்த தூய்மை, ஹால்மார்க் முத்திரை மற்றும் சிறந்த கைவினைத்திறனுடன் இருக்கும்' என்றும் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் உறுதியளித்துள்ளது. இந்தத் திட்டம் தமிழ்நாட்டுத் தாய்மார்களுக்குப் பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

