திமுக கூட்டணியில் இருந்து ஐ.யூ.எம்.எல். விலகல்: முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்.) திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. இந்த முக்கிய முடிவு அக்கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற அவசர பொதுக்குழு கூட்டத்தில், தேசியத் தலைவர் முனீருல் மில்லத் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்தில் 480 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தற்போதைய அரசியல் சூழலில் திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிக்க இயலாது என்றும், இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக்கு துணை நின்ற கூட்டணி கட்சியினருக்கும், வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றபோதும், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காத சூழலில், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்ற அச்சம் நிலவியது. அப்போது, பாஜகவின் மறைமுக ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. ஜோசப் விஜய், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு ஆதரவு கோரி கடிதம் அனுப்பினார். இதனைத் தொடர்ந்து, 09.05.2026 அன்று நடைபெற்ற உயர்மட்டக் குழு கூட்டத்தில் ஆதரவு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டு, ஆளுநரிடம் ஆதரவு கடிதம் வழங்கப்பட்டது. இதன் விளைவாக, 10.05.2026 அன்று திரு. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். பின்னர், தமிழக வெற்றிக் கழகத்தின் வேண்டுகோளின் பேரில், 21.05.2026 அன்று நடைபெற்ற அவசரக் கூட்டத்தில், ஓர் அமைச்சர் பதவிக்கு பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம். ஷாஜஹான் அவர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டதோடு, தமிழக அரசில் ஐ.யூ.எம்.எல். அங்கம் வகிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்த ஐ.யூ.எம்.எல். தலைமைக்கு சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், சமீபத்தில் நடந்து முடிந்த கேரள மாநில சட்டமன்றத் தேர்தலில், ஐ.யூ.எம்.எல். சார்பில் போட்டியிட்ட 28 வேட்பாளர்களில் 22 பேர் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்ததற்கும், மாண்புமிகு வி.டி. சதீசன் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசில் பி.கே. குஞ்ஞாலிக் குட்டி, கே.எம். ஷாஜி, என். சம்சுதீன், பி.கே. பஷீர், வி.இ. அப்துல் கபூர் ஆகிய 5 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டதற்கும் இக்கூட்டத்தில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version