இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில், கடந்த சில மாதங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மூத்த விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ள சம்பவம் மத்திய அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ககன்யான் மற்றும் சந்திரயான் போன்ற முக்கிய திட்டங்களில் பங்காற்றியவர்கள் வெளியேறுவது, இந்தியாவின் விண்வெளி கனவுகளுக்கு பின்னடைவை ஏற்படுத்துமோ என்ற கவலையை எழுப்பியுள்ளது.
இஸ்ரோவில் தற்போது 14,600க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 2012 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் மட்டும் சுமார் 700 ஊழியர்கள் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறுகிய காலத்தில் இத்தனை பேர் தாமாக பதவி விலகியதால், விருப்ப ஓய்வு தொடர்பான விதிமுறைகளை இஸ்ரோ கடுமையாக்கியுள்ளது.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம், இந்தியாவின் பல்வேறு முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ள நிலையில், முக்கிய விஞ்ஞானிகள் பலர் வெளியேறி வருவது கவலையளிக்கிறது. குறிப்பாக, ராஜினாமா செய்தவர்கள் அனைவரும் ககன்யான், சந்திரயான் உள்ளிட்ட திட்டங்களில் மிக முக்கியப் பங்காற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செயற்கைக்கோள் திட்டங்களில் மத்திய அரசு தற்போது தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்தி வருகிறது. இந்த தனியார் நிறுவனங்கள், தலைமைப் பொறுப்புகளுக்கு அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகளைத் தேடி வருவதாகவும், இதனால் இஸ்ரோவில் இருந்து வெளியேறும் முக்கிய விஞ்ஞானிகள் தனியார் நிறுவனங்களில் இணைந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக, இனி முக்கியமான திட்டங்கள் தொடர்பான விஞ்ஞானிகள், அதாவது 'குரூப் ஏ' வகையைச் சேர்ந்தவர்களின் விலகல் கோரிக்கைகள் விண்வெளித் துறைக்கு அனுப்பப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட திட்டங்கள் முடியும் வரை இயக்குநர்கள் அவர்களின் ராஜினாமாவை ஏற்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2020 நவம்பரில் கொண்டுவரப்பட்ட விதியின்படி, விஞ்ஞானிகளின் ராஜினாமா கடிதங்களை ஏற்கும் அதிகாரம் இஸ்ரோவின் அந்தந்த மையங்களின் இயக்குநர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்த அதிகாரம் பறிக்கப்பட்டு, அனைத்து ராஜினாமா விண்ணப்பங்களும் விண்வெளித் துறையின் (DoS) இறுதி முடிவுக்கே அனுப்பப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் மிகப்பெரிய மையமான விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் மட்டும் சுமார் 20 பேர் விலகியுள்ளனர். இதில் விண்வெளித் துறைக்கான 'ஸ்பாடெக்ஸ்' திட்ட இயக்குநர் மற்றும் சந்திரயான் திட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த இளம் விஞ்ஞானிகள் அடங்குவர். பெங்களூரு யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்தில் இருந்து சுமார் 80 விஞ்ஞானிகள் வரை ராஜினாமா செய்துள்ளனர். திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் (VSSC) இருந்தும் பலர் வெளியேறியுள்ளனர். இதில் LVM-3 ராக்கெட் திட்ட இயக்குநர் விக்டர் ஜோசப், சந்திரயான்-3 திட்ட உருவகப்படுத்துதல் பிரிவு மேலாளர் ஆதித்யா ரல்லபள்ளி உள்ளிட்ட முக்கிய நபர்களும் அடங்குவர்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் மற்றும் பல்வேறு மேம்பட்ட செயற்கைக்கோள் ஏவுதல்கள் போன்ற இந்தியாவின் லட்சியத் திட்டங்கள் அடுத்தடுத்து செயல்படுத்தப்பட உள்ள நிலையில், முக்கிய விஞ்ஞானிகள் அடுத்தடுத்து வெளியேறுவது இந்த லட்சியக் கனவைத் தகர்த்துவிடும் என்பதால் மத்திய அரசு அதிர்ச்சியடைந்துள்ளது.

