அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிய அரசு தன்னை கொலை செய்ய சதி செய்வதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியில் மூன்று வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்கா-ஈரான் இடையே இருந்த போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்து போனதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, வளைகுடாவில் உள்ள அமெரிக்க படைப்பிரிவு தலைமையகமான சென்ட்காம், ஈரானுக்கு எதிராக புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானில் மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இந்த தாக்குதல் அறிவிப்புக்கு நேட்டோவும் ஆதரவு தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், 'ஈரான் என்னை கொலை செய்ய சதி செய்கிறது' என்று டிரம்ப் நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'அமெரிக்க தலைவர்களை அவர்கள் (ஈரானை குறிப்பிடுகிறார்) ஒழிக்க முயற்சிக்கிறார்கள். அவர்களின் பட்டியலில் எனது பெயரும் உள்ளது. இதுவரை எனக்கு அதிர்ஷ்டம் துணையாக இருந்துள்ளது. ஆனால் அது எப்போதும் கை கொடுக்கும் என்று கூற முடியாது. அவர்கள் மிகவும் கெட்ட மற்றும் வக்கிரமான குணம் கொண்டவர்கள். புற்றுநோய் போன்ற அவர்களை வேரறுக்க வேண்டும்' என்று ஆவேசமாக கூறினார்.
இந்த குற்றச்சாட்டுக்கள் இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன. அமெரிக்காவின் புதிய தாக்குதல்கள் மற்றும் ஈரானின் பதிலடி குறித்த அச்சம் நிலவி வருகிறது. டிரம்ப்பின் இந்த திடீர் குற்றச்சாட்டு சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

