ராய்ப்பூர்: 2026 ஐபிஎல் தொடரில் ராய்ப்பூரில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில், நட்சத்திர வீரர் விராட் கோலி தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளார். இதற்கு முந்தைய போட்டியிலும் அவர் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் சில ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி சற்று தடுமாறி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சேசிங் செய்ய வந்தது. அப்போது தொடக்க வீரராக களம் இறங்கிய விராட் கோலி, முதல் ஓவரின் நான்காவது பந்தில் தீபக் சாஹரின் பந்துவீச்சை சந்தித்தார். அதுவே அவர் இந்தப் போட்டியில் சந்தித்த முதல் பந்து ஆகும். அந்தப் பந்திலேயே அவர் கேட்ச் கொடுத்து ‘கோல்டன் டக்’ முறையில் ஆட்டமிழந்தார்.
இதற்கு முன் மே 7 அன்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் விராட் கோலியின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் மிக விரைவாக 300 ரன்களை எட்டி ஆரஞ்சு கேப் பட்டியலில் முன்னிலையில் இருந்தார். ஆனால் தற்போது அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆகியிருப்பது பெங்களூரு ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கோலியின் இந்த திடீர் சரிவு குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் அனல் பறக்கின்றன. ஒருபுறம் ரசிகர்கள் அவரை விமர்சித்தாலும், மறுபுறம் அவரது தீவிர ஆதரவாளர்கள் ஜாம்பவான் வீரர்கள் இது போன்ற சரிவுகளில் இருந்து மீண்டு வருவது இயல்பு தான் என அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.