2026 ஐபிஎல் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடர்ச்சியான பின்னடைவுகளை சந்தித்து வருகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் படுதோல்வி அடைந்ததோடு, கேப்டன் பேட் கம்மின்ஸ் மீது 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த 56வது லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, சாய் சுதர்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, குஜராத் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 14 ஓவர்களில் வெறும் 86 ரன்களுக்கு சுருண்டு 82 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஜேசன் ஹோல்டர் மற்றும் ககிசோ ரபாடா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹைதராபாத் பேட்டிங் வரிசையை நிலைகுலையச் செய்தனர்.
இந்த தோல்வியின் அதிர்ச்சி மறையும் முன்பே, குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காத காரணத்தால் கேப்டன் பேட் கம்மின்ஸுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது நடப்பு சீசனில் ஹைதராபாத் அணி செய்யும் முதல் ஓவர் ரேட் தவறு என்பதால், அபராதத்துடன் தப்பித்துள்ளது.
இதுபோன்ற விதிமீறல்கள் ஐபிஎல் தொடரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக பிசிசிஐ கருதுகிறது. முன்னதாக, அபிஷேக் சர்மா நடுவரின் தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்ததற்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் ஓய்வறையில் இ-சிகரெட் பயன்படுத்தியதற்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால், அனைத்து அணிகளுக்கும் ஒரு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறும் செயல்கள் தொடர்ந்தால் கடும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வீரர்களின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. வீரர்களின் அறைகளுக்குள் அனுமதியின்றி வெளியாட்கள் செல்வதைத் தடுக்கவும், வீரர்கள் ஏமாற்று வலையில் சிக்காமல் பார்த்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.