ஜெய்ப்பூர்: 2026 ஐபிஎல் தொடரின் 50வது லீக் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான் அணியின் முடிவை சுக்குநூறாக உடைத்து மாபெரும் ஸ்கோரை குவித்து மிரட்டியுள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி. பவுண்டரிகளும் சிக்சர்களுமாக பறக்கவிட்ட குஜராத் பேட்ஸ்மேன்கள் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் என்ற பிரம்மாண்ட ஸ்கோரை குவித்துள்ளனர். ராஜஸ்தான் அணியின் முன்னணி பந்துவீச்சாளர்கள் எப்படி இந்த அளவுக்கு மோசமாக ரன்களை வாரி வழங்கினர்.
குஜராத் அணிக்கு தொடக்க வீரர்களாக கேப்டன் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பம் முதலே ராஜஸ்தான் பந்துவீச்சை இவர்கள் இருவரும் எந்தவித கருணையும் இன்றி சரமாரியாக விளாசினர். பவர் பிளே எனப்படும் முதல் 6 ஓவர்களிலேயே குஜராத் அணி 82 ரன்களை குவித்து மிரட்டியது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 65 பந்துகளில் 118 ரன்கள் சேர்த்து பிரம்மாண்ட அடித்தளம் அமைத்தது. அபாரமாக ஆடிய சாய் சுதர்சன் 36 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடி ஆட்டம் ஆடிய கேப்டன் சுப்மன் கில் 44 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 84 ரன்கள் குவித்து அசத்தினார்.
பின்னர் வந்த ஜோஸ் பட்லர் 10 பந்துகளில் 13 ரன்களும், ஜேசன் ஹோல்டர் 7 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ராகுல் திவேதியா ஆகியோர் கடைசி கட்டத்தில் அதிரடியை தொடர்ந்தனர். சுந்தர் 20 பந்துகளில் 3 சிக்சர்கள் உட்பட 37 ரன்களுடனும், திவேதியா வெறும் 4 பந்துகளில் 2 சிக்சர்களை பறக்கவிட்டு 14 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
மறுபுறம் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சு படுமோசமாக அமைந்தது. நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 3 ஓவர்கள் மட்டுமே வீசி 46 ரன்களை வாரி வழங்கினார். துஷார் தேஷ்பாண்டே 4 ஓவர்களில் 52 ரன்களை விட்டுக்கொடுத்தார். பிரிஜேஷ் ஷர்மா 4 ஓவர்களில் 47 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். யாஷ் ராஜ் புஞ்சா 37 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டையும், ரவீந்திர ஜடேஜா 34 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதில் கொடுமை என்னவென்றால், ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் 16 வைடுகள் உட்பட மொத்தம் 19 ரன்களை எக்ஸ்ட்ராவாக குஜராத் அணிக்கு தாரை வார்த்தனர். இப்போது 230 ரன்கள் என்ற இமாலய இலக்கை சொந்த மண்ணில் ராஜஸ்தான் அணி எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிறியுள்ளது.