இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவைச் சந்தித்துள்ளன. இதன் காரணமாக, முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் சுமார் ரூ.10.14 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் நிலவிய சரிவு, திங்கட்கிழமையும் தொடர்ந்த நிலையில், செவ்வாய்க்கிழமையும் சந்தை கடுமையான வீழ்ச்சியைப் பதிவு செய்தது.
வர்த்தகம் முடிவில், மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,456 புள்ளிகள் சரிந்து 74,559 என்ற புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 436 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 23,379 என்ற புள்ளிகளிலும் நிலைபெற்றன. இந்த சரிவு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சந்தை வீழ்ச்சிக்கு பல்வேறு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. அமெரிக்கா – ஈரான் இடையேயான பதற்றமான சூழல், குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான ஈரானின் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்க மறுத்தது, உலகளாவிய சந்தைகளில் நிச்சயமற்ற தன்மையை அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடிப்பதால், கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 105 டாலர்களைத் தாண்டி உயர்ந்துள்ளது. இது இந்தியா போன்ற எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு பெரும் சுமையாக அமைந்துள்ளது.
மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் 95.55 ஆக சரிந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் என்ற கவலையே இதற்குக் முக்கிய காரணம். அமெரிக்காவின் 10 ஆண்டு கால கடன் பத்திர லாபம் 4.423% ஆக உயர்ந்துள்ளது. கடன் பத்திரங்களில் லாபம் அதிகரிக்கும்போது, முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையிலிருந்து பணத்தை எடுத்து பாதுகாப்பான கடன் பத்திரங்களில் முதலீடு செய்யத் தொடங்குவார்கள். இது பங்குச் சந்தைக்கு அழுத்தத்தை கொடுக்கிறது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) தொடர்ந்து இந்திய பங்குகளை விற்று வருவதும், கடந்த திங்கட்கிழமை மட்டும் சுமார் ரூ.8,438 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றதும் இந்த சரிவுக்கு மேலும் வலு சேர்த்துள்ளன.