உத்தர பிரதேசத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல், திருமண மேடையில் பெரும் குழப்பத்தில் முடிந்தது. மணமகனை நேரில் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த மணமகள், 'இவர் எனக்கு தெரியாது' என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹர்தோய் மாவட்டத்தை சேர்ந்த தேவேந்திர சிங், இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணுடன் பழகியுள்ளார். செல்போன் எண்ணை பெற்று, தொலைபேசியில் பேசி காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணத்திற்கு வழிவகுத்தது.
கடந்த மே 12-ஆம் தேதி திருமண ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்றன. மணமகன் வீட்டார் ஹோட்டலில் தங்கி, ஊர்வலமாக மணமகளின் வீட்டை அடைந்தனர். அப்போதுதான் எதிர்பாராத திருப்பம் நிகழ்ந்தது.
மணமேடையில் மணமக்களை நேரில் பார்த்தபோது, மணமகள் திடீரென அலறியுள்ளார். 'நான் காதலித்தது இவர் இல்லை. தொலைபேசியில் பேசியவர் தன்னை ராகுல் என்றுதான் அறிமுகப்படுத்திக் கொண்டார். இவரை எனக்கு தெரியாது' என்று அவர் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இரு வீட்டினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறியது. இதில் மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.