வெளிநாடுகளில் பணிபுரியும் இந்திய அறிவியல் அறிஞர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் தாய்நாட்டிற்கு திரும்புவதை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு 'பிரதமரின் ஆராய்ச்சி இருக்கை திட்டம் 2026' (பிஎம்ஆர்சி) என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், வெளிநாடு வாழ் இந்திய விஞ்ஞானிகளுக்கு ரூ.14 கோடி வரை நிதியுதவி வழங்கப்படும்.
செயற்கை நுண்ணறிவு, கணினி சில்லு, எரிசக்தி, இணையப் பாதுகாப்பு, மருத்துவம், உயிர்தொழில்நுட்பம், அரிய வகை கனிமங்கள், விண்வெளி-பாதுகாப்பு, தகவல் தொடர்பு, உற்பத்தி, வேளாண்மை, மீன்வளம், அணுசக்தி என மொத்தம் 13 முக்கிய துறைகளில் ஆராய்ச்சி திட்டங்களில் பங்கேற்க வெளிநாடு வாழ் இந்திய விஞ்ஞானிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம், அந்நிய நாடுகளில் சிறந்து விளங்கும் இந்திய வம்சாவளியினர் தங்கள் திறமைகளை தாய்நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
திட்டத்தின் கீழ், இளம் ஆய்வாளர்களுக்கு ரூ.4 கோடி வரையிலும், மூத்த ஆய்வாளர்களுக்கு ரூ.6.5 கோடி முதல் ரூ.14 கோடி வரையிலும் உதவித்தொகை வழங்கப்படும். டெல்லி, மும்பை, சென்னை, கான்பூர், ஹைதராபாத், தன்பாத் ஆகிய இடங்களில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்கள் மற்றும் பெங்களூருவில் உள்ள ஐஐஎஸ்சி கல்வி நிறுவனங்களில் இந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம்.
இந்த பிஎம்ஆர்சி திட்டத்தில் இணைய https://pmrc.education.gov.in/ என்ற இணையதள முகவரி வழியாக வரும் ஜூலை 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் இந்திய விஞ்ஞானிகளின் தாயகம் திரும்புவதை ஊக்குவித்து, நாட்டின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.