இந்திய ரயில்வேயின் குளுகுளு ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளிடம் இருந்து திருடப்படும் தலையணைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள் ஆகியவற்றின் மதிப்பு பல கோடிகளை எட்டியுள்ளது. இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ரயில்களில் போர்வை மற்றும் படுக்கை விரிப்புகள் வழங்கும் வழக்கம், கடந்த 2022 ஜனவரி மாதம் முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், 2022 ஜனவரி முதல் இந்த ஆண்டு மே மாதம் வரையிலான காலகட்டத்தில், அதாவது சுமார் நாலரை ஆண்டுகளில் திருடப்பட்ட போர்வை, தலையணை உள்ளிட்ட பொருட்கள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 18 ரயில்வே கோட்டங்களில் 16 கோட்டங்களின் 54 பிரிவுகளிடம் இருந்து தகவல்களைப் பெற்றுள்ளது.
நாடு முழுவதும் இந்திய ரயில்வேக்குச் சொந்தமான ரயில்களின் குளுகுளு வசதி கொண்ட ஏசி பெட்டிகளில் தினமும் சுமார் 8 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர். இவர்களுக்குத் தேவையான படுக்கை விரிப்புகள், போர்வை, தலையணை, தலையணை உறை மற்றும் முகம் துடைக்கும் துண்டு ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்தப் பொருட்களைப் பயன்படுத்திய பிறகு, அவற்றை ரயில் பெட்டியிலேயே திரும்ப வைத்துவிட வேண்டும் என்பது விதிமுறை.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, ஆயிரத்தில் ஒரு பயணி இந்தப் பொருட்களில் குறைந்தபட்சம் ஒன்றையாவது திருடிச் செல்வதாகத் தெரியவந்துள்ளது. இந்தத் திருட்டுப் போக்கினால், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் சுமார் 1.27 கோடிப் பொருட்கள் திருடப்பட்டுள்ளன. இதன் காரணமாக, இத்தகைய துணிகளைத் தயாரித்து வழங்கும் ஒப்பந்ததாரர்களுக்கு சுமார் ரூ.104.51 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தத் திருட்டுச் சம்பவங்கள் ரயில்வே நிர்வாகத்திற்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தி வருகின்றன.
