தங்கம், வெள்ளி இறக்குமதி வரி உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு!

புதுடெல்லி: கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது. அமெரிக்க-ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் நீரிணைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், எரிசக்தி தேவைகளுக்கு அதிக டாலர்களைச் செலவிட வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

இந்தியா தனது எரிசக்தி மற்றும் தங்கத் தேவைகளுக்கு இறக்குமதியையே பெரிதும் நம்பியுள்ளது. குறிப்பாக, கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ளதால், நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு வேகமாக குறைந்து வருகிறது. இந்த நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, அத்தியாவசியமற்ற இறக்குமதிகளாகக் கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரிகளை மத்திய அரசு உயர்த்தி உள்ளது.

கடந்த நிதியாண்டில் (2025-26) மட்டும் சுமார் 72 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.6.89 லட்சம் கோடி) அளவுக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனை அளவு இறக்குமதி, நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பை வெகுவாகக் குறைத்துள்ளது. தங்கம், வெள்ளி இறக்குமதியைக் குறைப்பதன் மூலம், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தவும், வீழ்ச்சியடைந்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்தவும் இந்த வரி உயர்வு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இறக்குமதியைக் குறைப்பதன் மூலம் டாலருக்கான தேவையைச் சரிசெய்து, ரூபாய் மதிப்பை வலுப்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகத்தான், பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தங்கம் வாங்குவதைக் குறைந்தது ஓராண்டுக்காவது நிறுத்தி வைக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version