உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு மத்தியில், குறைந்த விலையுள்ள வெனிசுலா கச்சா எண்ணெயை இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் அதிக அளவில் கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளன. இது சவுதி அரேபியா மற்றும் அமெரிக்காவை விட அதிக இறக்குமதி அளவை எட்டியுள்ளது.
'கெப்ளர்' நிறுவனத்தின் தரவுகளின்படி, நடப்பு மே மாதத்தில் மட்டும் வெனிசுலாவிடமிருந்து ஒரு நாளைக்கு 4.17 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதத்தின் (2.83 லட்சம் பேரல்) அளவை விட கணிசமாக அதிகமாகும். கடந்த ஒன்பது மாதங்களாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்யாத நிலையில், தற்போது வெனிசுலாவிடமிருந்து இறக்குமதி திடீரென உயர்ந்துள்ளது.
மேற்கு ஆசியப் போர் சூழல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, இந்தியா தனது இறக்குமதி உத்திகளை மாற்றி அமைத்துள்ளது. இதன் விளைவாக, ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அடுத்தபடியாக, வெனிசுலாவிடமிருந்துதான் இந்தியா அதிக அளவிலான எண்ணெயை தற்போது கொள்முதல் செய்கிறது.
வெனிசுலா கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்புக்கு அதன் விலை முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சர்வதேச சந்தையில் மற்ற எண்ணெய் வகைகளை விட வெனிசுலா கச்சா எண்ணெய் மலிவாகக் கிடைக்கிறது. இது குறித்து 'கெப்ளர்' நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் நிகில் துபே கூறுகையில், 'பொருளாதார ரீதியான லாபம் மற்றும் இந்திய சுத்திகரிப்பு ஆலைகளின் கட்டமைப்புக்கு ஏற்றதாக இருப்பதால், இந்திய நிறுவனங்கள் வெனிசுலா எண்ணெய் மீது அதிக ஆர்வம் காட்டுகின்றன' என்று தெரிவித்தார்.