மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் 200 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான பாதுகாப்பு தளவாட உற்பத்தி ஆலை திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையின் மூலம் சுமார் 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஆலையை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று திறந்து வைத்தார்.
திறப்பு விழாவில் பேசிய ராஜ்நாத் சிங், 'ஒரு காலத்தில் நாம் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடாக மட்டுமே இருந்தோம். ஆனால், இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. அடுத்த 25 முதல் 30 ஆண்டுகளில், உலகிலேயே அதிக ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உருவெடுக்கும். இதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது' என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், 'பாதுகாப்புத் துறை உற்பத்தியில் தனியார் துறையின் பங்களிப்பை 50 சதவீதமாக உயர்த்துவதே எங்கள் முக்கிய இலக்காகும். தனியார் நிறுவனங்கள் வெறும் உதிரி பாகங்களை மட்டும் தயாரிப்பவை அல்ல. அவை அதிநவீன ஆயுத அமைப்புகளை உருவாக்கும் திறன்கொண்டவை. மத்திய அரசின் தொலைநோக்கு பார்வையும், தனியார் துறையின் புதுமைகளும் இணையும்போது, இந்தியா புதிய உயரங்களை எட்டும்' என்றார்.
'இந்தியாவை வெடிமருந்துகள் மற்றும் ஆட்டோமேஷன் துறையில் உலகளாவிய மையமாக மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்' என்று ராஜ்நாத் சிங் தனது உரையை நிறைவு செய்தார்.