2026 டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி, சமீபத்தில் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்துள்ளது. இந்த அதிர்ச்சித் தோல்வி, மிகப்பெரும் ஐபிஎல் மோசடி ஒன்றை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
2025 மற்றும் 2026 ஐபிஎல் தொடர்களில், இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பல போட்டிகளில் ஐபிஎல் அணிகள் 200 ரன்களைக் கடந்து அசத்தின. பல பேட்ஸ்மேன்கள் ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 500க்கும் அதிகமான ரன்களைக் குவித்தனர். ஆனால், அது எல்லாமே ஒரு மோசடி என்பதுதான் தற்போது நிரூபணமாகியுள்ளது. ஐபிஎல் தொடரின் தட்டையான பிட்ச்களில் ஆடிப் பழகிய இந்திய பேட்ஸ்மேன்களின் உண்மையான பலவீனத்தை இந்த அயர்லாந்து டி20 தொடரின் தோல்வி அம்பலப்படுத்தி, ஐபிஎல் மோசடி என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளது.
பெல்ஃபாஸ்ட்டில் நடைபெற்ற முதல் போட்டியில், 183 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்தியா, 148 ரன்களுக்குச் சுருண்டு 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும், அயர்லாந்து நிர்ணயித்த 155 ரன்கள் என்ற சிறிய இலக்கை எட்ட முடியாமல், 153 ரன்களுக்குச் சுருண்டு 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை கோட்டைவிட்டது. இதன் மூலம், அயர்லாந்து அணி இந்தியாவை வீழ்த்தி முதன்முறையாக வரலாற்று டி20 தொடர் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமான பிட்ச்கள், சிறிய எல்லைக் கோடுகள் மற்றும் இம்பாக்ட் பிளேயர் போன்ற சாதகமான விதிகளால் 200-க்கும் அதிகமான ரன்களை எளிதாகக் குவித்து தங்களை மாபெரும் அதிரடி வீரர்களாகக் காட்டிக் கொண்ட இந்திய பேட்ஸ்மேன்களின் சாயம், அயர்லாந்தின் வேகமும் பவுன்சும் நிறைந்த மைதானத்தில் வெளுத்துள்ளது. சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா போன்ற வீரர்கள் அயர்லாந்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பொறுமையின்றி விக்கெட்டுகளை வாரி வழங்கினர். வெறும் சிக்ஸர்களை மட்டுமே நம்பி விளையாடும் இவர்களின் பேட்டிங் நுணுக்கம் மற்றும் பொறுமையற்ற ஆட்டம் வெளிநாட்டு மைதானங்களில் முற்றிலும் எடுபடவில்லை.
வெறும் பொழுதுபோக்கு மற்றும் ரன் குவிக்கும் கண்காட்சியாக மாறிப்போன ஐபிஎல் பிட்ச்கள், சர்வதேச கிரிக்கெட்டின் சவாலான சூழலில் விளையாடும் திறனை இந்திய பேட்ஸ்மேன்களிடம் மழுங்கடித்துவிட்டன என்பதை இந்தத் தொடர் உணர்த்தியுள்ளது. தட்டையான பிட்ச்களில் மட்டும் ரன் குவிக்கும் வீட்டுப் புலிகளாக இல்லாமல், உண்மையான சவாலான பிட்ச்களிலும் விளையாடி ஜெயிக்கப் பழக வேண்டும். இல்லையெனில், சர்வதேச அரங்கில் இது போன்ற அவமானங்களை இந்திய டி20 அணி தொடர்ந்து சந்திக்க வேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.