பர்மிங்காமில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 45 வினாடிகள் நீடித்த கரவொலியுடன் தொடங்கியது. இது இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், ஜாம்பவானுமான பாப் வில்லிஸின் நினைவாக நடத்தப்பட்டது. புளூ ஃபார் பாப் (Blue For Bob) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
புரோஸ்டேட் புற்றுநோயால் 2019-ஆம் ஆண்டு காலமான பாப் வில்லிஸின் நினைவாக, அவரது குடும்பத்தினரால் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. 2021 முதல், இங்கிலாந்தின் சொந்த மண்ணில் நடைபெறும் கோடைக்கால கிரிக்கெட் போட்டிகளின்போது இது ஒரு வழக்கமான நிகழ்வாக மாறியுள்ளது. கடந்த ஆறு சீசன்களில், தி பாப் வில்லிஸ் ஃபண்ட் (The Bob Willis Fund) மூலம் சுமார் 28.35 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. இந்த நிதி, புரோஸ்டேட் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சிகள், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் ஆரம்பக்கட்டத்திலேயே நோயைக் கண்டறிவதை ஊக்குவித்தல் போன்ற முக்கிய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
இது குறித்து பேசிய பாப் வில்லிஸின் மனைவியும், தி பாப் வில்லிஸ் ஃபண்ட் அமைப்பின் இணை நிறுவனருமான லாரன் கிளார்க், 'பாப்பைக் கொண்டாடுவதற்கும், எங்களைப் போன்ற பிற குடும்பங்கள் துயரப்படுவதைத் தடுப்பதற்கும் ஒரு வழியாகவே புளூ ஃபார் பாப் தொடங்கப்பட்டது. இந்த இறுதி ஆண்டு, எங்களது நன்றியைத் தெரிவிப்பதற்கும், இந்த நிதியம் சாதித்த அனைத்தையும் கொண்டாடுவதற்கும், பாப்பைப் போன்ற ஒரு உயிரைக் காப்பாற்ற மக்கள் கடைசியாக ஒருமுறை நிதியளிக்குமாறு கேட்டுக்கொள்வதற்குமான ஒரு வாய்ப்பாகும்' என்று தெரிவித்தார்.
இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக், முன்னாள் கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 'கிரிக்கெட் வரலாற்றின் ஒரு முக்கியப் பகுதி பாப் வில்லிஸ். இந்த இறுதி அஞ்சலியில் வீரர்கள் பங்கேற்பது எங்களுக்குப் பெருமையளிக்கிறது. இன்றைய தினம் ஒரு நபராவது மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள அல்லது முன்கூட்டியே செயல்பட உதவினால், அதுவே அவருக்குச் செலுத்தும் மிகப்பெரிய மரியாதையாக அமையும்' என்று கூறினார்.
பாப் வில்லிஸ், இங்கிலாந்தின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராகவும், புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளராகவும் திகழ்ந்தவர். 1971 முதல் 1984 வரையிலான தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில், அவர் 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 325 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம், இங்கிலாந்தின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சிறந்த பந்துவீச்சாளர்களின் வரிசையில் அவர் இடம்பிடித்துள்ளார்.
குறிப்பாக, 1981-ஆம் ஆண்டு ஹெடிங்லேயில் நடைபெற்ற புகழ்பெற்ற ஆஷஸ் தொடரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 43 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதே அவரது கிரிக்கெட் வாழ்வின் மிக உயரிய தருணமாகக் கருதப்படுகிறது. இந்தச் சாதனை, இங்கிலாந்து அணிக்கு ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது.
தனது நீண்ட ரன்-அப் மற்றும் ஆக்ரோஷமான பந்துவீச்சு பாணிக்கு பெயர் பெற்ற வில்லிஸ், ஓய்வு பெறுவதற்கு முன்பு 18 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஊடகத் துறைக்குள் நுழைந்து, ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் முக்கியத் தொகுப்பாளராக மாறினார். அவரது முகபாவனையற்ற தனித்துவமான நகைச்சுவை உணர்வு, மற்றும் இங்கிலாந்து அணி மீதான நேர்மையான விமர்சனங்கள் ஆகியவற்றிற்காக அவர் அறியப்பட்டார்.
மேலும், அவர் பாடகர் பாப் டிலானின் தீவிர ரசிகராக இருந்ததால், தனது பெயரின் நடுவே டிலான் என்பதை சட்டப்பூர்வமாக இணைத்துக் கொண்டார். இந்தச் சிறப்பு மரியாதை, பாப் வில்லிஸின் கிரிக்கெட் பங்களிப்பையும், அவர் விட்டுச் சென்ற நினைவுகளையும் போற்றும் வகையில் அமைந்தது.

