இசைஞானி இளையராஜாவின் இசைப் பயணம் 50 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. 'அன்னக்கிளி' திரைப்படம் வெளியாகி அரை நூற்றாண்டைக் கடந்த நிலையில், அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த இளையராஜா, தனது இசைப் பயணம் குறித்தும், ரசிகர்களின் அன்பு குறித்தும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
தற்போது இயக்குநர் பால்கி இயக்கும் படத்திற்கு இசையமைத்து வருவதாகக் கூறிய இளையராஜா, 'வருடம் தான் போய்க் கொண்டிருக்கிறதே தவிர, நான் எங்கு இருந்து எப்படி வந்தேனோ, அப்படியே தான் இருக்கிறேன். எல்லோரும் இசைக் கடவுளாக என்னைப் பார்ப்பது பற்றி கேட்கிறீர்கள். அது, அவர்களின் அன்பைக் காட்டுகிறது. நான் இசையமைக்கும் போது என் மனதில் எந்த நினைவும் இருக்காது. வெறுமையாகவே இருக்கும். கோயிலுக்குப் போவதை விட இசை மிகவும் புனிதமானது. அதனால்தான் மக்கள் என்னை என்னென்னவோ சொல்லிக் கொண்டாடுகிறார்கள். நான் இல்லாமல் போனாலும் அந்த கொண்டாட்டம் தொடரும் என்பது எல்லோருக்கும் தெரியும்' என்று குறிப்பிட்டார்.
'அன்னக்கிளி' படத்திற்கு இசையமைத்த அனுபவம் குறித்துப் பேசுகையில், 'ஜி.கே.வெங்கடேஷ் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் நான் கீபோர்டு வாசித்துக் கொண்டிருந்தேன். சுமார் 250 படங்களுக்கு மேல் பணிபுரிந்தாலும் எனக்கென்று பட வாய்ப்பு வந்தபோது, எப்படிப் பாடலைத் தொடங்குவது? என்று யோசித்துப் பார்த்தேன். மற்ற இசையமைப்பாளர்களிடம் பணியாற்றிய போது எனக்கு இப்படி ஒரு எண்ணம் வந்ததே இல்லை. ஆனால், எனக்கென்று வந்தபோது பல யோசனைகள் வந்தது. என்னைத் தனிக்காட்டில் விட்ட மாதிரி இருந்தது. 'அன்னக்கிளி உன்னத் தேடுதே' என பாடல் வரிகளை எழுதிவிட்டார்கள். பீச்சில் நடந்து கொண்டே பாடலுக்கான இசையை எப்படித் தொடங்கலாம் என யோசித்துக் கொண்டே இருந்தேன். ஒரு பெண்ணின் விரகதாபத்தை இந்தப் பாடல் சொல்கிறது என்ற எண்ணத்தில், ஒரு ஹம்மிங்கை வைத்தேன். இதற்காகப் பல நாட்கள் யோசித்தேன். பிறகு எங்கு ஷாட் வைக்கப் போகிறார்கள் என்று யோசித்து இசை அமைத்தேன். ஒவ்வொரு பாடலையும் இப்படி இசை அமைத்துக் கொடுத்ததால்தான் இன்றும் உயிரோடு இருக்கிறது. ரசிகர்களின் ஆத்மாவாக மாறியிருக்கிறது' என்று அவர் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின்போது இயக்குநர் பால்கி, கே. பாக்யராஜ், பாடலாசிரியர் பா. விஜய் ஆகியோர் இளையராஜாவுடன் உடனிருந்தனர். 50 ஆண்டுகால இசைப் பயணத்திலும், ரசிகர்களின் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருப்பது இளையராஜாவின் இசைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.