தமிழக முதலமைச்சர் விஜய் தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக ஆளுநரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, கரூர் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் பேசியது உண்மைக்கு மாறாகவும், வழக்கின் விசாரணையை பாதிக்கும் வகையிலும் அமைந்திருப்பதாகக் கூறினார். இது குறித்து சிபிஐ மற்றும் கரூர் வழக்கை கண்காணிக்கும் நீதிபதியிடமும் மனுவாக அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கட்சி மாறுமாறு தவெகவினர் தன்னை அணுகியதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதன் அடிப்படையிலேயே இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதே குதிரை பேரம் நடந்ததற்கான ஆதாரம் என்றும் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டார்.
மேலும், முதலமைச்சர் விஜய் கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டு விட்டதாக கீழ் தரமாக பேசுவதாகவும், இதுபோன்று முதல்வர் பேச ஆரம்பித்தால் தாங்களும் பதிலுக்கு பேச வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்றும் அவர் எச்சரித்தார்.
கடந்த தேர்தலில் ஒரு செத்த பாம்பை வைத்து பிரச்சாரம் செய்ததாகவும், ஆனால் அந்த சமயத்தில் ஒரு கருநாகம் புகுந்துவிட்டதாகவும், அந்த தவறை மீண்டும் செய்ய மாட்டோம் என்றும் அவர் கூறினார்.
வைகோ மீது சதி உள்ளிட்ட குற்ற வழக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தினார்.
குதிரை பேர அரசியல் தொடர்பாக ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

