கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றிய நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் சுகதன் சிறையிலேயே பதவியேற்கலாம் என கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது மக்களாணைக்கு மதிப்பளிக்கும் செயல் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பரில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக வெற்றி பெற்றது. புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பின்போது, பாஜகவைச் சேர்ந்த 20 கவுன்சிலர்கள் உள்ளூர் தெய்வங்களின் பெயரில் உறுதிமொழி ஏற்றனர். இது சட்டப்படி செல்லாது என்றும், அவர்கள் அனைவரும் புதிதாக பதவி ஏற்க வேண்டும் என்றும் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, 19 கவுன்சிலர்கள் சட்டப்பூர்வமாக பதவியேற்றுக் கொண்டனர்.
ஆனால், 35-வது வார்டு பாஜக கவுன்சிலரான சுகதன் மட்டும் பதவியேற்கவில்லை. உள்ளூர் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக கடந்த ஜூன் மாதம் அவர் கைது செய்யப்பட்டார். கேரள சமூக விரோத தடுப்புச் சட்டத்தின் (கேஏஏபிஏ) கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, திருவனந்தபுரம் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில், பாஜக கவுன்சிலர் சுகதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சிகளும், காங்கிரஸும் வலியுறுத்தின. கேரள நகராட்சி சட்டப்படி, தொடர்ந்து 3 கூட்டங்களில் பங்கேற்காத கவுன்சிலர் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்ற அடிப்படையில் இந்த வலியுறுத்தல் எழுந்தது. இதனால் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் பெரும் மோதல் ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில், திருவனந்தபுரம் மாநகராட்சி கவுன்சிலராக பதவியேற்க சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என்று சுகதன் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி குன்னி கிருஷ்ணன் விசாரித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி குன்னி கிருஷ்ணன், 'பொதுமக்கள் வாக்களித்து சுகதனை தேர்வு செய்துள்ளனர். மக்களின் தீர்ப்பை நிராகரிக்க முடியாது. திருச்சூரில் உள்ள வையூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகதன், சிறையிலேயே கவுன்சிலராக பதவியேற்கலாம்' என்று உத்தரவிட்டார்.
மேலும், 'ஜூலை 14-ம் தேதி (இன்று) காலை 11 மணிக்கு சிறையில் பதவியேற்பு விழாவை நடத்த சிறை நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். இதில் செய்தியாளர்கள் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும்' என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இந்த உத்தரவு, மக்களாணையை மதிக்கும் ஒரு முக்கிய தீர்ப்பாகக் கருதப்படுகிறது.

