தமிழகத்தில் இன்று ஆகஸ்ட் 14ஆம் தேதி, 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் குடை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவி வருவதால் இந்த மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.
மேலும், ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை ஆகஸ்ட் 15ஆம் தேதி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் நாட்களில், ஆகஸ்ட் 19ஆம் தேதி தேனி, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும், ஆகஸ்ட் 20ஆம் தேதி தேனி, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இன்று முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை, தமிழக கடலோரப் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
