தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இனாம்மணியாச்சி கிராமத்தில் இந்த திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலை வெறும் ஜல்லிக்கற்களை மட்டுமே கொண்டுள்ளது. பல மாதங்களாகியும் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
இதுகுறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்த சாலைக்கான பில் தொகை ஏற்கனவே செட்டில் செய்யப்பட்டுவிட்டதால், சாலைப் பணியை அப்படியே முடித்துவிட்டதாக கணக்கு காட்டியதாக தெரிகிறது. இதனால், ஒப்பந்ததாரர்கள் ஜல்லிக்கற்களுடன் சாலையை அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல இடங்களில் இதேபோன்ற நிலைதான் நிலவுவதாக குற்றச்சாட்டுகள் வலுத்துள்ளன. திட்டத்தின் நோக்கம் நிறைவேற்றப்படாமல், நிதி முறைகேடு நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுபோன்ற முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி, தரமான சாலை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும், திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுவதில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.