நாட்டில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதால், மக்கள் தங்க நகைகள் வாங்குவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும், சொந்த வாகனப் பயன்பாட்டைக் குறைத்து, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும், மின்சார வாகனங்களுக்கு மாறவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
பிரதமரின் இந்த கோரிக்கையைத் தொடர்ந்து, பெங்களூருவில் தங்கம் மற்றும் வெள்ளி வாங்கும் மக்களின் ஆர்வம் சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பா.ஜனதா கட்சியினர் கருத்து தெரிவிக்கையில், இது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்று கூறியுள்ளனர்.
இதேபோல், சொந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்து, பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்தத் தொடங்கியதால், ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் நாளொன்றுக்கு சுமார் 150 முதல் 250 லிட்டர் வரை பெட்ரோல் மற்றும் டீசல் சேமிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தகவல்களுக்கு பா.ஜனதாவினர் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.
இருப்பினும், இந்த திடீர் சரிவு குறித்து தங்க நகைக்கடை உரிமையாளர்களோ அல்லது தங்க நகைக்கடை உரிமையாளர்கள் சங்கமோ அதிகாரப்பூர்வமாக எந்த தகவல்களையும் இதுவரை வெளியிடவில்லை. இதனால், மக்களின் வாங்கும் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த முழு விவரங்களும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.