தங்கக்காசு மோசடி: மகளிர் காவல் ஆய்வாளர் கைது!

தங்கக்காசு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மகளிர் காவல் ஆய்வாளர் ஷீலா மேரி.

சென்னை ராயபுரம் மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய ஷீலா மேரி, குறைந்த விலையில் தங்கக்காசு மற்றும் வீட்டு மனை வாங்கித் தருவதாக காவலர்களின் குடும்பத்தினரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் இவர், ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக ஷீலா மேரி பணியாற்றியபோது, அவரது ஓட்டுநர் பிரபு மணியுடன் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. 'குறைந்த விலைக்கு தங்கக்காசு வாங்கித் தருகிறோம்' என்ற ஆசைவார்த்தையைக் கூறி காவலர்களிடம் பணம் வசூலித்துள்ளனர். ஆரம்பத்தில் சிறிய தொகையைக் கொடுத்து தங்கக்காசு வாங்கிய காவலர்கள், பின்னர் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளனர். கொடுங்கையூர் பகுதியில் அலுவலகம் நடத்தி வந்த பிரபு மணி, காவலர்களிடம் இருந்து கோடிக்கணக்கான பணத்தைப் பெற்றுக் கொண்டு, கூறியபடி தங்கக்காசுகளையோ அல்லது பணத்தையோ திருப்பித் தராமல் தலைமறைவானார்.

இந்த மோசடி திட்டத்தில் பெண் ஆய்வாளர் ஷீலா மேரி உடந்தையாக இருந்ததும், இதற்காக அவருக்குக் குறிப்பிட்ட கமிஷன் தொகையும் வழங்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட காவலர்கள் இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், மோசடிக்கு உடந்தையாக இருந்த பிரபு மணியை போலீஸார் ஏற்கனவே கைது செய்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, சுமார் 20 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்ய உதவியதாகக் கூறப்படும் ராயபுரம் பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரியை, கடந்த ஜூன் 15-ஆம் தேதி வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். ஷீலா மேரி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று இரவு சென்னையில் வைத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் ஷீலா மேரியை அதிரடியாகக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version