நீட் தேர்வுக்கு எதிராக 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' முன்னெடுத்த போராட்டத்தில், எழுச்சியுடன் பங்கேற்ற மாணவர்களையும் இளைஞர்களையும் கண்டு பிரதமர் மோடி அஞ்சியுள்ளார். இதனால், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகச் செய்துள்ளார். இது தொடர்பாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்பமை ஜெயச்சந்திரன், தேர்தல் வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்தபோது, உச்ச நீதிமன்றம் இதுபோன்ற வழக்குகளில் பத்து ஆண்டுகளுக்கு மேல் கால தாமதம் செய்தால், அண்டை நாடுகளைப் போல் 'Gen Z' இளைஞர்கள் கொதித்தெழும் சூழ்நிலை ஏற்படும் என எச்சரித்ததை அப்பாவு நினைவுபடுத்தியுள்ளார்.
விவசாயிகள் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்று, பிரதமர் தனது முதல் தோல்வியை தழுவினார். தொகுதி மறுவரையறை மசோதாவில் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் எடுத்த முயற்சியால் அம்மசோதா தோற்கடிக்கப்பட்டு, பிரதமருக்கு இரண்டாவது தோல்வி ஏற்பட்டது.
தற்போது, '#GenZ' இளைஞர்கள் மூன்றாவது முறையாக மோடிக்கு தோல்வியைக் கொடுத்துள்ளனர். காங்கிரசால் முடியாததை 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' செய்து காட்டி இருக்கிறது என அப்பாவு குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், நீட் தேர்வை ரத்து செய்வது தான் நிரந்தர தீர்வு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இத்தனையும் கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் தமிழக முதல்வருக்கும், விரைவில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் அப்பாவு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். '#CMsir' என்ற ஹேஷ்டேக்கையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.
