தூத்துக்குடியில் திமுக ஆட்சியில்தான் குளிர்சாதன பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது என்றும், 850 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன என்றும், ஆனால் ஆட்சி மாறியதில் இருந்து அனைத்தும் தாங்கள்தான் செய்ததாக தவெகவினர் சமூகவலைதளங்களில் பொய் செய்திகளைப் பரப்பி வருவதாகவும் திமுகவின் கீதா ஜீவன் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 'பிங்க் பேட்ரோல்' திட்டத்தை பெயர் மாற்றம் செய்து, ஸ்டிக்கர் ஒட்டி 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' என தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், 'த.வெ.கவினரின் அட்ராசிட்டி அதிகமாகிவிட்டது. பல்வேறு இடங்களில் த.வெ.கவினரின் அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றன. தேர்தல் முடிவுகள் வரும் வரை மின்சார தட்டுப்பாடு எதுவும் இல்லை. இதற்கு காரணம் நிர்வாக சீர்கேடுதான்' என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
'தன்னுடைய கட்சியிலேயே ஒரு பெண் கதறி அழுது கொண்டிருப்பது முதலமைச்சருக்கு கேட்கவில்லையா? தனி மனித ஒழுக்கம் பற்றி பேசி, முதலமைச்சர் பொறுப்பிலிருந்து நழுவுகிறார். சொந்தக் கட்சியினருக்கே நீதி கிடைக்காதபோது, ஒட்டுமொத்த தமிழகப் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு வழங்குவீர்கள்? ஸ்ரீவைகுண்டம் சம்பவத்தில் உங்கள் சொந்தக் கட்சிக்காரருக்கே நீதி கிடைக்காதபோது தமிழகப் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு தருவீர்கள்?' என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உதயநிதி தலைமையில் திமுக வலுவாக செயல்படுவதாகவும், தவெகவினர் சமூகவலைதளங்களில் பொய் செய்திகளைப் பரப்பி வருவதாகவும் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.