இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் பயிற்சியாளர் குழுவில் அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இந்திய அணியின் முக்கிய பயிற்சியாளர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பிரபல ஐபிஎல் அணியில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் படுதோல்வி அடைந்து கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. இந்தச் சூழலில், பயிற்சியாளர் குழுவில் மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிசிசிஐ உடன் 2 ஆண்டுகள் + 1 ஆண்டு நீட்டிப்பு என்ற ஒப்பந்த அடிப்படையில் கம்பீரின் குழுவில் இணைந்த ஒரு பயிற்சியாளரின் 2 ஆண்டுகால ஒப்பந்தம் முடிவடையும் நிலையில், அவர் உலகளவில் பல லீக்-களில் அணிகளை வைத்திருக்கும் ஒரு ஐபிஎல் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது.
குறிப்பாக, சமீபகாலமாக இந்திய வீரர்களின் மோசமான ஃபீல்டிங் தரம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஐபிஎல் அணியில் இணைய வாய்ப்புள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கௌதம் கம்பீருடன் இணைந்து ரியான் டென் டோஸ்கேட், மோர்னே மோர்கல் மற்றும் அபிஷேக் நாயர் ஆகியோர் 2024 ஜூலை மாதம் பயிற்சியாளர் குழுவில் இணைந்தனர். இதில் அபிஷேக் நாயர் ஏற்கனவே 2025ஆம் ஆண்டு அணியில் இருந்து விலகினார். கம்பீர் மற்றும் மோர்கல் கூட்டணியின் கீழ் இந்திய அணி 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2026 டி20 உலகக் கோப்பைகளை வென்று சாதனை படைத்தது.
ஆனால், சமீபத்தில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிராகத் தொடர்ச்சியாக 5 டி20 போட்டிகளில் இந்திய அணி தோற்றுத் தொடரை இழந்தது. இது பயிற்சியாளர் குழுவின் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளது. 2027ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடங்க இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில், பயிற்சியாளர் குழுவில் ஏற்படும் இந்த திடீர் மாற்றம் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.
இந்த நேரத்தில் கம்பீரின் பயிற்சியாளர் குழுவில் மாற்றம் நடக்கப் போவது, கம்பீர் மீதான நம்பிக்கையை பிசிசிஐ இழந்து வருகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அடுத்து நடைபெற உள்ள ஜிம்பாப்வே டி20 தொடர் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடர்களில் தற்காலிக அடிப்படையில் விவிஎஸ் லட்சுமண் தலைமையிலான வேறு பயிற்சியாளர் குழு இந்திய அணியை வழிநடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த திடீர் மாற்றங்கள் மற்றும் தோல்விகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வரும் நிலையில், இது இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால செயல்திறனில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பயிற்சியாளர் குழுவில் உள்ள அதிருப்தி மற்றும் அதிரடி மாற்றங்கள் குறித்த செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

