பஞ்சாப் முன்னாள் கிரிக்கெட் வீரர் அமன்பிரீத் சிங் கில், 36 வயதில் காலமானார். அவரது மறைவு கிரிக்கெட் உலகினரிடையே பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவர் ஒரு துடிப்பான வேகப்பந்து வீச்சாளராக அறியப்பட்டவர்.
அமன்பிரீத் பஞ்சாப் அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடினார். 2007 ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான முத்தரப்புத் தொடரில் இந்தியாவுக்காக விளையாடினார். விராட் கோலி, மணீஷ் பாண்டே போன்றோருடன் இணைந்து, அத்தொடரில் ஐந்து போட்டிகளில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி, வங்கதேசத்திற்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.
அமன்பிரீத் மறைவுச் செய்தியை அடுத்து, முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங், தனது ’X’ தளத்தில் அஞ்சலி செலுத்தினார். “அமன்பிரீத் சிங் கில் காலமான செய்தியைக் கேட்டு ஆழ்ந்த வருத்தமடைந்தேன். எங்கள் ஆரம்ப நாட்களில் இருவரும் ஆடை மாற்றும் அறையைப் பகிர்ந்துகொண்டோம், அவர் அமைதியான, கடின உழைப்பாளி மற்றும் விளையாட்டை நேசித்த ஒரு கிரிக்கெட் வீரர். அவரது குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஆன்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி,” என்று யுவராஜ் சிங் குறிப்பிட்டிருந்தார்.
1989 செப்டம்பரில் சண்டிகரில் பிறந்த அமன்பிரீத் சிங், உள்ளூர் கிரிக்கெட் மூலம்முன்னேறினார். பின்னர், ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (தற்போது பஞ்சாப் கிங்ஸ்) அணிக்காகவும் களமிறங்கினார். விளையாட்டில் ஓய்வு பெற்ற பின், பஞ்சாப் மூத்த தேர்வுக் குழு உறுப்பினராகப் பணியாற்றி, இளம் கிரிக்கெட் வீரர்களின் வளர்ச்சிக்கு பங்களித்தார்.
பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் (PCA) தனது இரங்கலைத் தெரிவித்து, களத்திலும் வெளியேயும் அமன்பிரீத் காட்டிய அர்ப்பணிப்பை நினைவு கூர்ந்தது. அவரது இறுதிச் சடங்குகள் அன்று மாலை சண்டிகரில் உள்ள மணிமஜ்ரா தகன மைதானத்தில் நடைபெற்றன. மரணக் காரணம் வெளியிடப்படவில்லை. எனினும், கிரிக்கெட் சமூகம் அவரது வாழ்க்கை, விளையாட்டுப் பங்களிப்புகளைப் பாராட்டுகிறது.

