விமான எரிபொருள் விலை உயர்வு மற்றும் சர்வதேச சூழல்கள் காரணமாக, ஏர் இந்தியா நிறுவனம் தனது 6 முக்கிய வழித்தடங்களில் விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பயணிகள் மத்தியில் பெரும் கவலை எழுந்துள்ளது.
இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு, விமானப் போக்குவரத்துத் துறை தற்போது கடுமையான நெருக்கடியில் இருப்பதாகவும், மத்திய அரசு இதில் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தது. சர்வதேச சந்தையில் விமான எரிபொருளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதும், சில நாடுகளின் வான்வெளி கட்டுப்பாடுகளும் ஏர் இந்தியாவின் இந்த முடிவுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே சில சர்வதேச வழித்தடங்களில் விமான சேவைகளை ஏர் இந்தியா குறைத்திருந்த நிலையில், தற்போது இந்த 6 வழித்தடங்களில் சேவைகள் ஆகஸ்ட் மாதம் வரை நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா, டெல்லி-சிகாகோ, மும்பை-நியூயார்க், டெல்லி-ஷாங்காய், சென்னை-சிங்கப்பூர், மும்பை-டாக்கா மற்றும் டெல்லி-மாலே ஆகிய வழித்தடங்களில் இந்த தற்காலிக நிறுத்தம் அமலில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
இந்த 6 வழித்தடங்களில் முழுமையாக சேவைகள் நிறுத்தப்படுவதோடு மட்டுமல்லாமல், 20-க்கும் மேற்பட்ட பிற சர்வதேச வழித்தடங்களில் விமானங்களின் வாராந்திர இயக்க எண்ணிக்கையையும் ஏர் இந்தியா குறைத்துள்ளது. இருப்பினும், மாதத்திற்கு 1,200-க்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் வட அமெரிக்காவிற்கு வாரத்திற்கு 33, ஐரோப்பாவிற்கு 47, இங்கிலாந்திற்கு 57, ஆஸ்திரேலியாவிற்கு 8, தூர கிழக்கு, தென்கிழக்கு ஆசியா மற்றும் சார்க் பிராந்தியங்களுக்கு 158, மொரிஷியஸிற்கு 7 விமானங்கள் அடங்கும்.