முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டசபை தொகுதியின் தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம், செந்தில் பாலாஜி பேரம் பேசியதாக ஒரு புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில், செந்தில் பாலாஜி தனது தம்பி அசோக் குமாரின் தூண்டுதலின் பேரிலேயே எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதன் காரணமாக, பேரம் பேசிய வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவின. இந்த கைது நடவடிக்கையை தவிர்க்கும் நோக்கில், இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் பெற்றனர்.
நீதிமன்றம் இருவருக்கும் சில நிபந்தனைகளை விதித்தது. அதன்படி, தினமும் இரண்டு முறை சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து, இருவரும் காவல் நிலையத்தில் தொடர்ந்து ஆஜராகி கையெழுத்திட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் செந்தில் பாலாஜி காவல் நிலையத்தில் கையெழுத்திட செல்லவில்லை. அவரது தம்பி அசோக் குமார் மட்டுமே காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். அப்போது, செந்தில் பாலாஜி எங்கே என்று காவல் துறையினர் கேட்டதற்கு, 'அண்ணனுக்கு உடல்நலம் சரியில்லை. மருத்துவமனையில் உள்ளார்' என்று அசோக் குமார் பதிலளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை. இந்த தகவல் வெளியானதை அடுத்து, செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. அவர் எங்கு சிகிச்சை பெற்று வருகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
