சென்னை: சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது, தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சினோரா அசோக் தாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சேகர்பாபு மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி, சென்னை துறைமுகம் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றபோது, மண்ணடி அங்கப்பன் நாயக்கன் தெருவில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தன்னைத் தாக்கியதாக சினோரா அசோக் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதே சமயம், சேகர்பாபு தரப்பிலிருந்தும் எதிர் தரப்பினர் மீது புகார் அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், சினோரா அசோக் அளித்த புகாரின் அடிப்படையில், வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீஸார், சேகர்பாபு மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், ஆபாசமாகப் பேசுதல், காயம் விளைவித்தல், கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

