வேலை வாய்ப்பு கோரி மதுரையில் ‘காக்ரோச்’ இளைஞர்கள் பேரணி

மதுரையில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகளை வலியுறுத்தி 'காக்ரோச்' என்ற இளைஞர் இயக்கம் சார்பில் பேரணி நடைபெற்றது. வேலையின்மை, போட்டித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிராக இந்த பேரணி நடத்தப்பட்டது.

காந்தி மியூசியத்தில் தொடங்கி தமுக்கம் மைதானம் வரை நடைபெற்ற இந்த பேரணியில் ஏராளமான இளைஞர்களும் பெண்களும் பங்கேற்றனர். ஊழலுக்கு எதிராகவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

'காக்ரோச்' இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வா பேசுகையில், 'சமீபத்தில் ஒரு நீதிபதி, இளைஞர்களை கரப்பான் பூச்சி, ஒட்டுண்ணி போல தொந்தரவு செய்கின்றனர் என்று கருத்து தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, வேலையின்மை மற்றும் வாழ்வாதார சிக்கல்களில் தவிக்கும் இளைஞர்கள் தங்களை 'கரப்பான் பூச்சி' என அடையாளப்படுத்திக் கொண்டு நாடு முழுவதும் ஒன்றிணைகின்றனர். இந்த இயக்கத்துடன் தொடர்புடைய சமூக வலைதளப் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்த இயக்கத்தை ஒடுக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது' என்று கூறினார்.

மேலும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகள் ஆகியவை இளைஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துவதாகவும், நீட் தேர்வு ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைப்பதாகவும் அவர் தெரிவித்தார். 2014-ல் ஆட்சிக்கு வந்தபோது ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக மத்திய அரசு உறுதியளித்திருந்ததாகவும், ஆனால் இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும், இந்திய இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version