த.வெ.க. அரசு பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) அரசு, இன்று (மே 13) காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்கிறது. பேரவை கூடியதும், பெரும்பான்மையை நிரூபிப்பது தொடர்பாக முதலமைச்சர் விஜய் தொடக்க உரையாற்றுவார். அதன் பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்கும் நடவடிக்கை தொடங்கும்.

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி, விஜய் தலைமையிலான த.வெ.க. 108 இடங்களைக் கைப்பற்றி அதிகபட்சமாக வெற்றி பெற்றது. இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் இல்லாததால், மற்ற கட்சிகளின் ஆதரவை நாடியது.

அதன்படி, காங்கிரஸ் (5), மார்க்சிய கம்யூனிஸ்ட் (2), இந்திய கம்யூனிஸ்ட் (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2), மற்றும் விடுதலை சிறுத்தைகள் (2) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சி அமைக்க உரிமை கோரியது. இதைத் தொடர்ந்து முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

கடந்த மே 10-ஆம் தேதி 17-வது சட்டப்பேரவை கூடியது. நேற்று முன்தினம் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர். நேற்று, சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகர், துணைத் தலைவர் ரவி சங்கர், கொறடா சபரிநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், முதலமைச்சர் விஜய் இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி தனது பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் உறுப்பினர்கள் சரிபாதிக்கு மேல் வாக்களிக்க வேண்டும்.

வாக்கெடுப்பு குரல் ஓட்டுகள் மூலமாகவோ அல்லது உறுப்பினர்களின் எண்ணிக்கையை எண்ணுவதன் மூலமாகவோ நடத்தப்படலாம்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version