மும்பையைச் சேர்ந்த ஒருவர், கடந்த 2023 ஏப்ரலில், பிளிப்கார்ட் இணையதளத்தில் சுமார் 1.11 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐபோன் 14 ப்ரோ மொபைல் போனை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு வந்த பார்சலில் ஐபோன் பதிலாக, தாடி பராமரிக்கும் எண்ணெய் பாட்டில் மற்றும் சில பொருட்கள் மட்டுமே இருந்துள்ளன. இதுகுறித்து பிளிப்கார்ட் நிறுவனத்திடம் முறையிட்டபோதும், உரிய தீர்வு கிடைக்காததால், பாதிக்கப்பட்ட நுகர்வோர் மும்பை மாவட்ட நுகர்வோர் கமிஷனில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் கமிஷன், பிளிப்கார்ட் நிறுவனத்தின் செயல் நியாயமற்றது என்றும், வாடிக்கையாளரின் புகாருக்கு உரிய தீர்வு வழங்காமல் தட்டிக்கழித்ததாகவும் கூறியுள்ளது. நுகர்வோர் தரப்பில் உடனடியாக புகார் அளிக்கப்பட்டும், தவறான பார்சல் திரும்பப் பெறப்படவில்லை, பணமும் திருப்பி அளிக்கப்படவில்லை என்பது உறுதியானதால், கமிஷன் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி, வாடிக்கையாளர் செலுத்திய அசல் தொகையான 1.11 லட்சம் ரூபாயை, 2023 ஏப்ரல் முதல் ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் பிளிப்கார்ட் நிறுவனம் திருப்பித் தர வேண்டும். மேலும், வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக 50,000 ரூபாயும், நீதிமன்ற வழக்கு செலவுக்காக 20,000 ரூபாயும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மொத்தமாக, 1.11 லட்சம் ரூபாய் அசல் தொகை, அதற்கான வட்டி, 50,000 ரூபாய் மன உளைச்சல் இழப்பீடு, மற்றும் 20,000 ரூபாய் வழக்கு செலவு என மொத்தம் சுமார் 1.81 லட்சம் ரூபாய்க்கு மேல் பிளிப்கார்ட் மற்றும் அதன் விற்பனையாளரான இன்டர்நேஷனல் வேல்யூ ரீடெய்ல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இணைந்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு, உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் நுகர்வோர் கமிஷன் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. இந்த தீர்ப்பு, ஆன்லைன் வர்த்தகத்தில் வாடிக்கையாளர் சேவை மற்றும் நேர்மை குறித்த முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
