தனிமையில் உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறி, ஒரு பைனான்சியரை நிர்வாணமாக்கி பணம் கேட்டு மிரட்டிய பெண் மற்றும் அவரது கூட்டாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், பிபட்டி கிராமத்தைச் சேர்ந்த 40 வயதான வடிவேல் என்பவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். கடந்த ஜூன் மாதம், கவிதா என்ற பெயரில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பெண் ஒருவர் அவரை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அந்த பெண், தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறி, ஜூன் 9 ஆம் தேதி வடிவேலிடம் இருந்து ஜி-பே மூலம் ரூ.4,500 பெற்றுள்ளார். அதன் பிறகு, இருவரும் தொடர்ந்து செல்போனில் பேசி பழகி வந்துள்ளனர்.
நாளடைவில் இவர்களது பழக்கம் நெருக்கமான நிலையை எட்டியுள்ளது. அப்போது, காரைக்குடிக்கு வந்தால் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருக்கலாம் என அந்த பெண் வடிவேலுவுக்கு ஆசை வார்த்தை கூறியதாக கூறப்படுகிறது. இதனை நம்பிய வடிவேல், ஜூன் 24 ஆம் தேதி காரைக்குடிக்கு சென்றுள்ளார்.
காரைக்குடியில், அந்த பெண் வடிவேலை சற்று தனிமையாக பேசலாம் என்று கூறி, அங்குள்ள ஒரு பழைய ஓட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அங்கு சென்றதும் வடிவேலுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டிற்குள் மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென வெளியே வந்து, வடிவேலை வலுக்கட்டாயமாக நிர்வாணமாக்கி தாக்கியுள்ளனர். மேலும், அவரிடம் இருந்து ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று வடிவேல் கூறிய நிலையில், அவரிடமிருந்த ஹோண்டா இருசக்கர வாகனம் மற்றும் செல்போனையும் பறித்துக் கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. பின்னர், அங்கிருந்து வீட்டிற்கு சென்ற வடிவேல், இந்த சம்பவம் குறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், காரைக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணமாக இருந்த கவிதா மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், இந்த கும்பல் வேறு யாரையும் இதேபோல் ஏமாற்றி உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
