தமிழ்நாட்டில் தட்கல் திட்டத்தின் கீழ் வேளாண் மின் இணைப்புக்கு விண்ணப்பித்த 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 8 மாதங்களாகியும் மின் இணைப்பு வழங்காமல் மின்வாரியம் ஏமாற்றி வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வறட்சியால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் உழவர்களிடம் ரூ.1250 கோடிக்கும் கூடுதலாக வசூலித்துக் கொண்டு, மின் இணைப்பு வழங்காமல் ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலத்தடி நீரை நம்பி விவசாயம் செய்யும் 45% நிலங்களுக்கு பம்ப் செட்டுகளை இயக்க இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த மின் இணைப்பைப் பெறுவது மிகவும் கடினமான செயலாக உள்ளது. ஏற்கனவே 23.56 லட்சம் இலவச வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 லட்சம் பேர் மின் இணைப்புக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.
இலவச மின் இணைப்பை முன்னுரிமை அடிப்படையில் பெறுவதற்காக தட்கல் திட்டம் மின்வாரியத்தால் செயல்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திமுக அரசு அறிவித்த தட்கல் திட்டத்தின் கீழ், டிசம்பர் 31 ஆம் தேதி வரை 47,554 விவசாயிகள் விண்ணப்பித்தனர். இவர்களிடம் இருந்து 5 குதிரைத்திறன் வரை ரூ.2.50 லட்சம் முதல் 15 குதிரைத்திறன் வரை ரூ.4 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
முதல்கட்டமாக 10 ஆயிரம் பேருக்கு 15 நாட்களில் மின் இணைப்பு வழங்கப்படும் என மின்வாரியம் அறிவித்திருந்தது. ஆனால், 8 மாதங்கள் ஆகியும் இதுவரை ஒரு விவசாயிக்குக் கூட மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால், குறுவை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.
தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 47,554 விவசாயிகள் சுமார் ரூ.1250 கோடி முன்பணமாக செலுத்தியுள்ளனர். இவர்களுக்கு முன்பாக, 2023 ஆம் ஆண்டில் இதே திட்டத்தில் விண்ணப்பித்த 12,566 விவசாயிகள் ரூ.250 கோடிக்கு மேல் முன்பணம் செலுத்தியுள்ளனர். பெரும்பாலான விவசாயிகள் வட்டிக்கு கடன் வாங்கி இந்த முன்பணத்தைச் செலுத்தியுள்ளனர். கடன் சுமையால் அவர்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மொத்தமாக, வேளாண் இலவச மின்சார இணைப்புக்காக 60,120 உழவர்களிடமிருந்து ரூ.1500 கோடியை மின்சார வாரியம் வசூலித்துள்ளது. தட்கல் திட்டத்தின்படி, விண்ணப்பித்தவர்களுக்கு 15 முதல் 90 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், ரூ.1000 மின் கட்டணம் செலுத்தத் தவறும் விவசாயிகளின் மின் இணைப்பை உடனடியாக துண்டிக்கும் மின்சார வாரியம், ரூ.1500 கோடியை வசூலித்தும் கொண்டும், 12,566 பேருக்கு 3 ஆண்டுகளுக்கும் மேலாகவும், மீதமுள்ளவர்களுக்கு 8 மாதங்களாகவும் மின் இணைப்பு வழங்க மறுப்பது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம் என அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
திமுக ஆட்சியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டாலும், தேர்தல் அறிவிப்பால் மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை என்றும், அடுத்த ஆட்சியில் தவெக அரசும் மின் இணைப்பு வழங்காமல் துரோகம் செய்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காதது, வறட்சி, பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படாதது போன்ற காரணங்களால் ஏற்கனவே துயரத்தில் உள்ள விவசாயிகளிடம் ரூ.1500 கோடியை வசூலித்துவிட்டு மின் இணைப்பு வழங்காமல் இருப்பது கூடுதல் துயரம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, தட்கல் திட்டப்படி விண்ணப்பித்து காத்திருக்கும் 60,120 உழவர்களுக்கும் உடனடியாக வேளாண் இலவச மின் இணைப்பை வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
