ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'கருப்பு'. இப்படத்தில் திரிஷா நாயகியாக நடித்துள்ளார். சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி, நட்டி நட்ராஜ் ஆகியோர் பிற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கடவுள் நம்பிக்கைகளையும் உள்ளடக்கிய ஒரு நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
'கருப்பு' திரைப்படம் மே 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படக்குழு தற்போது அதன் விளம்பரப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், ஐதராபாத்தில் 'கருப்பு' படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா, கார்த்தி, இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வின்போது சூர்யாவும் கார்த்தியும் மேடையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ரசிகர் ஒருவர் மேடைக்கு ஓடி வந்து நடிகர் சூர்யாவின் காலில் விழுந்தார். உடனடியாக பாதுகாவலர்கள் அவரை அங்கிருந்து வெளியேற்ற முயன்றனர். ஆனால், ரசிகரைத் தடுக்க வேண்டாம் என்று கூறிய சூர்யா, அவரது விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்தச் சம்பவத்தின் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.


