முன்னாள் முதலமைச்சர் விஜயின் அறிவிப்பு குறித்து தி.மு.க. மருத்துவ அணிச் செயலாளர் மருத்துவர் எழிலன் நாகநாதன் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளார். 'கஜானா காலியாகிவிட்டது' என்று கூறிக்கொண்டே, 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் புதிய கார்கள் எப்படி வழங்க முடியும்? என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் எழிலன் நாகநாதன், 'முந்தைய ஆட்சியில் கஜானாவை காலி செய்துவிட்டுச் சென்றுவிட்டதாகக் கூறுகின்றனர். ஆனால், அதே சமயம் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்கப்படும் என அறிவிக்கின்றனர். கார் இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் புதிய கார்களை வழங்க வேண்டும். ஏற்கனவே தேர்தல் வேட்புமனுவில் கார் இருப்பதாகத் தெரிவித்துள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புதிய கார் வழங்க வேண்டிய அவசியமில்லை' என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், இலவச மின்சாரம் குறித்த அரசின் அறிவிப்பையும் அவர் விமர்சித்தார். '500 யூனிட்டுகளுக்குள் 200 யூனிட் இலவச மின்சாரம் பொருந்தும் என்று த.வெ.க அரசு கூறுகிறது. ஆனால், 501 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால், ஒரு யூனிட்டிற்கு ரூ.4 என கணக்கிடப்படுகிறது. இதன் காரணமாகவே தற்போது மின் கட்டணம் அதிகரித்துள்ளது. இதுபோன்று திட்டங்களை அறிவிப்பது போல் அறிவித்துவிட்டு, மக்களிடம் இருந்து பணத்தை சுரண்டும் செயல் இது' என்று அவர் குற்றம் சாட்டினார்.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்துப் பேசிய அவர், 'முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முதலில் தொடங்கினார். 2021 முதல் 2026 வரையிலான தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மட்டும் சுமார் 25 லட்சம் மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன' என்று குறிப்பிட்டார்.
முதலமைச்சர் விஜய் இன்று வெளியிட்டுள்ள மூன்று அறிவிப்புகளும் வெறும் கவர்ச்சிக்கான அறிவிப்புகள் என்றும், அவை விளம்பரத்திற்காகவும், செய்திகளில் இடம்பெறுவதற்காகவும் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். 'இந்தத் திட்டங்களை எவ்வாறு செயல்படுத்தப் போகிறார்கள் என்பதை அவர்கள் தெளிவாக விளக்க வேண்டும். பட்ஜெட்டில் மருத்துவக் காப்பீட்டிற்காக ரூ.1,400 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போது காப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தும்போது, காப்பீட்டு நிறுவனத்திற்கு நாம் கூடுதலாக ரூ.4,000 கோடி வழங்க வேண்டியிருக்கும். இது எப்படி சாத்தியமாகும்?' என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மருத்துவக் காப்பீட்டு நிதி ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்கள் தெளிவாக இல்லை. இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மருத்துவர் எழிலன் நாகநாதன் கேட்டுக்கொண்டார்.

