கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும், கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டு உயிரி எரிபொருள் தேவையை அதிகரிக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.
ஏற்கனவே, பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் இலக்கை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்பே மத்திய அரசு எட்டியுள்ளது. தற்போது, பெட்ரோலில் 30% வரை எத்தனால் பயன்படுத்தும் சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், 'இ20' எனப்படும் 20 சதவீத எத்தனால் கலப்பு திட்டத்தைத் தாண்டி, பெட்ரோலில் அதிகளவு எத்தனால் கலப்பதை ஊக்குவிக்கும் வகையில், 22%, 25%, 27% மற்றும் 30% எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலுக்கு மத்திய அரசு மத்திய கலால் வரி விலக்கை நீட்டித்துள்ளது. இது பெட்ரோலிய உற்பத்தியாளர்களுக்கு பெரும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வரி விலக்குகள், பெட்ரோலுக்கான உரிய வரிகள் செலுத்தப்பட்டு, கலப்புக்கு பயன்படுத்தப்படும் எத்தனாலுக்குப் பொருந்தக்கூடிய ஜிஎஸ்டி செலுத்தப்பட்டிருந்தால் மட்டுமே பொருந்தும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.