ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாளவாடியில், நட்பை தொடர மறுத்ததால் திருமணமான பெண் ஒருவருக்கு கத்தியால் குத்தி கொலை முயற்சித்த பைனான்ஸ் கம்பெனி உரிமையாளர், பின்னர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாளவாடி பகுதியைச் சேர்ந்த அஞ்சு என்பவருக்கும், சாம்ராஜ்நகரைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடைபெற்று, இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து வந்த அஞ்சு, தாளவாடியில் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். குடும்பத் தேவைக்காக அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், பைனான்ஸ் கம்பெனி உரிமையாளரான நாகேந்திரன் (28) என்பவருடன் அஞ்சு நட்பு ரீதியாக பழகி வந்துள்ளார். பின்னர், அஞ்சு தனது கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழத் தொடங்கியுள்ளார். ஆனாலும், சாம்ராஜ்நகரில் உள்ள தனது பழைய கடையில் தொடர்ந்து வேலை செய்து வந்துள்ளார். இதற்காக தினமும் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
கணவருடன் மீண்டும் இணைந்துவிட்டதால், நாகேந்திரன் உடனான நட்பை அஞ்சு முற்றிலுமாக துண்டித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாத நாகேந்திரன், தொடர்ந்து அஞ்சுவை சந்தித்து பேசும்படி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், அஞ்சு அவருடன் பேச மறுத்துவிட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், அஞ்சு பணிபுரியும் கடைக்கு நேரில் சென்ற நாகேந்திரன், மீண்டும் அவருடன் பேச முயற்சித்துள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், அஞ்சு தனக்கு திருமணமாகி குழந்தை இருப்பதாகவும், தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். ஆனாலும், நாகேந்திரன் தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார்.
பலமுறை கெஞ்சியும் அஞ்சு தன்னுடன் பேச மறுத்ததால், ஆத்திரமடைந்த நாகேந்திரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அஞ்சுவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதைப் பார்த்த சக ஊழியர் ஒருவர், நாகேந்திரனை தடுத்து நிறுத்தி, அஞ்சுவை பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றியுள்ளார்.
சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காயமடைந்த அஞ்சுவை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதற்கிடையில், போலீசார் தன்னை கைது செய்ய வருவதை அறிந்த நாகேந்திரன், விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட அப்பகுதி மக்கள், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொடூர சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

