தமிழகத்தில் தவெக அரசு அமைந்து 60 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், இந்த ஆட்சியில் மக்கள் பயன்பெறும் வகையில் எந்தவொரு உருப்படியான சாதனையும் செய்யப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி (EPS) குற்றம் சாட்டியுள்ளார்.
கரூர் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசிய பேச்சைக் குறிப்பிட்டு பேசிய இபிஎஸ், விஜய் இன்னும் முதலமைச்சர் தகுதிக்கு வரவில்லை என்றும், ஒரு நாலாந்தர பேச்சாளர் போல சினிமா பாணியில் 'பஞ்ச் டயலாக்' பேசுவதாகவும் கடுமையாக விமர்சித்தார்.
முதலமைச்சர் விஜய் அண்மையில் பெண்களின் பாதுகாப்புக்காக ரூ. 354 கோடி மதிப்பீட்டில் 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதை ஒரு வெற்று விளம்பர அரசியல் 'ஷோ' என எடப்பாடி பழனிசாமி வர்ணித்தார். 'இரவு நேரத்தில் பெண்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் இந்த சிங்கப்பெண் சிறப்புப் படைக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது?' என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தங்களுக்கு தூய ஆட்சி, வெளிப்படையான ஆட்சி என்று மேடைகளில் தம்பட்டம் அடிக்கும் தவெக அரசு, கடந்த காலங்களில் கடுமையாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர்களையே தற்போது தங்கள் இயக்கத்தில் இணைத்துக்கொண்டு பதவிகளை வழங்கி வருவதாகவும் அவர் அம்பலப்படுத்தினார்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு நிஜமான பாதுகாப்பு அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை இபிஎஸ் நினைவுகூர்ந்தார். ஜெயலலிதாவின் 'அம்மா அரசு' இருந்தபோது அறிமுகப்படுத்தப்பட்ட 'காவலன் செயலி' என்ற மொபைல் ஆப் மூலம் பெண்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் உடனடியாக அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்து, போலீஸார் விரைந்து வந்து காப்பாற்றும் நடைமுறை இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால், தற்போது விளம்பரத்திற்காகக் கொண்டு வரப்பட்டுள்ள இந்த 'சிங்கப்பெண்' படையால் மக்களுக்கு உண்மையில் ஏதேனும் நன்மை கிடைக்கிறதா என்பது காலப்போக்கில் தான் தெரியும் என்றும், இதெல்லாம் வெறும் கண்துடைப்பு என்றும் விமர்சித்தார்.
செய்தியாளர்கள் எழுப்பிய, 'உங்களது சட்டமன்ற உறுப்பினர்களை உங்களால் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லையா?' என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி காரசாரமாகப் பதிலளித்தார். ஒரு கட்சியில் வெற்றி பெற்ற பிறகு, மாற்று முகாமிற்குத் தாவுவது என்பது தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத ஒரு தவறான முன்னுதாரணம் என்றும், இதுதான் தற்போதைய தவெக ஆட்சியில் முதன்முறையாக அரங்கேறி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசியல் சூழலில் பல மறைமுகப் பின்னணிகள் உள்ளதால், சில ரகசியங்களை இப்போதே வெளிப்படையாகப் பேச முடியாது என்றும், அதனைத் தகுந்த நேரத்தில் பிறகு அறிவிப்பேன் என்றும் கூறி டெல்லி மற்றும் உள்ளூர் அரசியல் வட்டாரங்களில் இபிஎஸ் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

