9-5 அலுவலக வேலை போல முதல்வர் பணியை இன்றைய முதலமைச்சர் பார்ப்பதாகவும், அந்த நேரத்திலாவது சட்டம் ஒழுங்கைக் காக்க அவர் ஏதேனும் பணி செய்தாரா என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தவெக ஒன்றியச் செயலாளர் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியை அடுத்து, எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் இதை பதிவிட்டுள்ளார். குற்றச் செயல்களில் இருந்து மக்களைக் காப்பது அரசின் கடமை என்றும், ஆனால் கடந்த ஒரு மாதமாக நடப்பதைப் பார்த்தால், தமிழக மக்களையும், குறிப்பாக பெண்களையும் தற்போதைய ஆளுங்கட்சியான தவெக நிர்வாகிகளிடமிருந்தே காப்பாற்ற வேண்டும் போல உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சொந்த கட்சி நிர்வாகிகளே பல குற்றங்களில், குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும்போது, அதை முதல்வராகவோ அல்லது கட்சித் தலைவராகவோ இன்றைய முதல்வர் என்ன செய்தார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். உள்துறையை வேறு அமைச்சரிடம் ஒப்படைக்கும் முடிவில் முதல்வர் இருப்பதாக வரும் செய்திகளையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இளம்பெண் பாலியல் வழக்கில் கைதாகியுள்ள தவெக நிர்வாகி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துவதாகவும் எடப்பாடி பழனிசாமி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.