நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சர்ச்சைக்குரிய வகையில் மிட்செல் சாண்ட்னரின் wristband-ஐ தொட்டதாக எழுந்த புகாரில், ஐசிசி (ICC) ஒழுங்கு நடவடிக்கை விசாரணைக்கு ஆளாகும் சூழல் உருவாகியுள்ளது. இந்த சர்ச்சைக்குரிய ஆட்டமிழப்பின் மூலம் ஸ்டோக்ஸ் தனது 250-வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
போட்டியின் போது டேரில் மிட்செல் மற்றும் வில் ஓரூக் ஆகியோரின் விக்கெட்டுகளை ஏற்கனவே வீழ்த்தியிருந்த ஸ்டோக்ஸ், சாண்ட்னரை தனது மூன்றாவது விக்கெட்டாக வீழ்த்தினார். ஸ்டோக்ஸ் வீசிய ஷார்ட்-பிட்ச் பந்தை எதிர்கொள்ள முயன்ற சாண்ட்னர் தடுமாற, பந்து அவரது கிளவுஸில் பட்டு எழும்பியது. இதை கல்லி திசையில் நின்ற ஜேக்கப் பெத்தேல் எளிதாக கேட்ச் பிடித்தார். கள நடுவர் அவுட் கொடுத்தாலும், சாண்ட்னர் DRS-க்கு மேல்முறையீடு செய்தார்.
மறுஒளிபரப்பில், பந்து சாண்ட்னரின் கிளவுஸில் உள்ள மணிக்கட்டுப் பட்டையின் மேல் பகுதியில் பட்டது தெளிவாகத் தெரிந்தது. ஐசிசி விதிகளின்படி, கிளவுஸின் மணிக்கட்டுப் பட்டை பேட்டின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது. இருப்பினும், பந்து தனது கிளவுஸில் படவில்லை என சாண்ட்னர் வாதிட்டார். மூன்றாவது நடுவர் வீடியோ பதிவுகளை ஆய்வு செய்து, கள நடுவரின் முடிவை உறுதி செய்தார். இதன் மூலம் ஸ்டோக்ஸ் தனது 250-வது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றினார்.
மூன்றாவது நடுவர் விக்கெட்டை மறுபரிசீலனை செய்துகொண்டிருந்தபோது, சாண்ட்னருக்கும் ஸ்டோக்ஸுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பந்து தனது கை பாதுகாப்புக் கவசத்தில் (Arm Guard) பட்டதாக சாண்ட்னர் கூற, ஸ்டோக்ஸ் அவரது கிளவுஸின் மணிக்கட்டுப் பகுதியைத் தட்டி பந்து அங்குதான் பட்டது என சுட்டிக்காட்டினார். இந்தச் செயல் ஐசிசி நடத்தை விதிகளின்படி, சக வீரர்களுடன் தேவையற்ற உடல் ரீதியான தொடர்பை ஏற்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, போட்டி அதிகாரிகள் ஸ்டோக்ஸின் இந்தச் செயலை ஆய்வு செய்ய வாய்ப்புள்ளது. இது திட்டமிட்டதா, தற்செயலானதா என ஆராயப்படும். தவறானது என நிரூபிக்கப்பட்டால், ஸ்டோக்ஸுக்கு அபராதம் அல்லது டிமெரிட் புள்ளி வழங்கப்படலாம். ஏற்கனவே, இரவு விடுதிக்கு சென்ற விவகாரத்தில் 2வது டெஸ்டில் விளையாட தடை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.