கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனை (கே.எம்.சி.எச்.) துணைத் தலைவரும், கல்வியாளரும், சமூகநல ஆர்வலருமான டாக்டர் தவமணி தேவி பழனிசாமி சனிக்கிழமை காலமானார். அவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர் தவமணி தேவி, தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவராகவும், கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனை மற்றும் டாக்டர் என்.ஜி.பி. கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தலைவருமான டாக்டர் நல்லா ஜி. பழனிசாமியின் அன்பு மனைவியாக திகழ்ந்தார். தமிழ் பண்பாடு, கலாசாரம் மற்றும் பாரம்பரிய மதிப்புகளின் மீது மிகுந்த பற்று கொண்டவராக விளங்கிய அவர், தனது எளிமை, மனிதநேயம் மற்றும் அன்பான அணுகுமுறையால் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தார்.
குறிப்பாக, பெண்கள் மத்தியில் உடல்நல விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் சமூகநல முயற்சிகளில் அவர் தீவிர அக்கறை காட்டி வந்தார். பெண்களின் உடல்நலம் மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து, அவர்களுக்கு உந்து சக்தியாக விளங்கினார்.
டாக்டர் தவமணி தேவியின் திடீர் மறைவுக்கு மருத்துவர்கள், கல்வியாளர்கள், தொழில்துறையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பல தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது என பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.