திமுக தயவில்தான் தவெக ஆட்சி: மு.க.ஸ்டாலின் பேச்சு

செங்கல்பட்டு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கஜேந்திரன், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சுமார் 1,000 பேர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், '75 ஆண்டுகளாக வெற்றிப் பயணம் தொடரும் பவள விழா கண்ட இயக்கம் திமுக. 6 முறை ஆட்சிக்கு வந்த திமுகவில் உங்களை வரவேற்கிறேன். பதவிக்காகவோ, சொகுசு வாழ்க்கைக்காகவோ யாரும் திமுகவுக்கு வரவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது' என்று கூறினார்.

'தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காகவே கூட்டணிக் கட்சிகளை அனுப்பி வைத்தேன். திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும். திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்பிய கட்சிகளின் ஆதரவோடுதான் தவெக ஆட்சி நடக்கிறது. பாஜக வந்துவிடக்கூடாது என்பதற்காகவே கூட்டணி கட்சியினரை வழி அனுப்பி வைத்தேன்' என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

'எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவில் இணைய வந்துள்ள அனைவரின் நோக்கம், திமுகவில் இணைந்து தமிழ் சமுதாயத்திற்காக பாடுபட வேண்டும், இழந்து கொண்டிருக்கும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதே. தொண்டனாக இருந்தாலும், தலைவராக இருந்தாலும் தனது கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்' என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version