திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டபோது தாக்கல் செய்த வேட்புமனுவில் அறக்கட்டளை சொத்து விவரங்களை மறைத்ததாக தொடரப்பட்ட தேர்தல் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின், தனது வேட்புமனுவில் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்து விவரங்களை மறைத்ததாக கூறி, தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் சிவஞானசம்பந்தம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். திமுக அறக்கட்டளையின் நிர்வாகியாக ஸ்டாலின் இருப்பதாகவும், அறக்கட்டளைக்கு சொந்தமாக செங்கல்பட்டு அருகே 2 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம் வாங்கியதை அவர் மறைத்ததாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும், ஸ்டாலின் மீதான வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஸ்டாலின் அறக்கட்டளை சொத்து விவரங்களை மறைத்தது குற்றம் என்றும், இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர், தேர்தல் வெற்றியை எதிர்த்து மட்டுமே தேர்தல் வழக்கு தொடர முடியும் என்றும், ஆவணங்களை மறைத்தது தொடர்பாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வேட்புமனுவில் தனிப்பட்ட சொத்து விவரங்கள் மட்டுமே தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், அறக்கட்டளை சொத்துகள் தனிப்பட்ட சொத்துகள் ஆகாது என்றும் கருத்து தெரிவித்தனர். மேலும், இந்த அறக்கட்டளை சொத்துகளில் மு.க.ஸ்டாலினுக்கு தனிப்பட்ட முறையில் சம்பந்தம் இருக்கிறது என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதால், அவருக்கு நோட்டீஸ் பிறப்பிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக கூறினர்.
இதனையடுத்து, வழக்கை திரும்ப பெறுவதாக மனுதாரரான சிவஞானசம்பந்தம் கூறியதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பு திமுகவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

