தமிழகத்தில் த.வெ.க. ஆட்சியின் கீழ் விவசாயிகள் படும் துன்பங்களுக்கு அவர்களே சாட்சி என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளை வீதிகளில் போராடவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக அவர் முதல்-அமைச்சரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கூட்டுறவு வங்கிகளில் 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 50% கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே முழு கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பால் விவசாயிகள் கொந்தளித்தனர். இதனையடுத்து, 75 ஆயிரம் ரூபாய் வரை முழு கடன் தள்ளுபடி என அறிவிக்கப்பட்டது. ஆனால், சொன்னதைச் செய்ய நேரம் கேட்ட முதல்-அமைச்சர், இன்னும் எவ்வளவு காலம் வேண்டும் என்பதை விவசாயிகளிடம் தெரிவிக்கவில்லை என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருவதாகவும், மத்திய நிதி-மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய ஜல்சக்தி துறை மந்திரியை கர்நாடக முதல்-மந்திரி நேரில் சந்தித்து நிதியுதவி கோரியுள்ளார். மேலும், கடைமடை மாநிலங்களின் அனுமதி தேவையில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய ஜல்சக்தி துறை தெரிவித்த பதிலை கர்நாடக எம்.பி.க்கள் மேற்கோள் காட்டி பேசியுள்ளனர். கர்நாடக மந்திரி ராமலிங்க ரெட்டி, மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் எனவும், தமிழ்நாடு அரசின் அனுமதி தேவையில்லை எனவும் ஊடகங்களிடம் பேசி வருகிறார்.
இதற்கு மாறாக, தமிழ்நாடு முதல்-அமைச்சர் பிரதமருக்குக் கடிதம் எழுதியதோடு தனது கடமை முடிந்துவிட்டதாக மவுனம் காப்பதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகம் சென்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் கூறியதாகவும், பின்னர் அது மறுக்கப்பட்டதாகவும், தற்போது தமிழ்நாடு சார்பில் சில விவகாரங்கள் தொடர்பாக முதல்-அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக கர்நாடக முதல்-மந்திரி கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டும், காவிரி நீரை நமக்கு உரிய பங்கு வழங்க முடியாது என கர்நாடக மாநில முதல்-மந்திரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் இன்னும் வாய் திறக்கவில்லை. மேலும், மேகதாது விவகாரம் தொடர்பாக ஒரு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் வலியுறுத்தப்பட்ட நிலையில், கர்நாடக பயணம் இதனை நீர்த்துப்போகச் செய்யாதா என்ற கேள்வியும் எழுகிறது. இந்த அரசின் எந்தத் தகவல்களிலும் தெளிவு இல்லை, வெளிப்படைத்தன்மை இல்லை, எல்லாவற்றிலும் குழப்பமும் ஏமாற்றமும் மட்டுமே மிஞ்சுவதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தனது திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காகவே முதல்-அமைச்சர் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசாமல் அமைதி காப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. இதற்கு எந்தப் பதிலும் இல்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தோடு, விவசாயச் சங்கப் பிரதிநிதிகளின் கூட்டத்தையும் கூட்டச் சொல்லி கோரிக்கை விடுத்தும், முதல்-அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறார்.
கடந்த ஆண்டு 6.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்த நிலையில், இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்படாததால் 1.5 லட்சம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி நடப்பதாகவும், இதனால் 2,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு 14 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. எனவே, ஏக்கர் ஒன்றுக்குக் குறுவை நிவாரணமாக 25 ஆயிரம் ரூபாய், காப்பீட்டுத் திட்டத்துக்கான பிரீமியம் தொகையை அரசே செலுத்தி முழு காப்பீடு கிடைக்க உதவி, சம்பா சாகுபடிக்கான மறுமுதலீடாக விதை, உரம், பூச்சிக்கொல்லி போன்ற இடுபொருட்கள் மானியமாக வழங்குதல் போன்ற நிவாரணத் தொகுப்பை அறிவிக்க வேண்டும் என திமுக கோரியுள்ளது.
விவசாயப் பெருமக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் த.வெ.க. அரசின் மெத்தனப்போக்கைக் கண்டித்தும் வரும் 03-08-2026 அன்று காலை 10.00 மணியளவில், தஞ்சாவூர், பனகல் கட்டடம் அருகில் கழக இளைஞரணிச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த தி.மு.க. முடிவெடுத்துள்ளது. இந்தப் போராட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் என அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு விவசாயிகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும், அனைத்து விவசாயச் சங்கங்களையும், ஒருமித்த கருத்துடைய அனைத்து அரசியல் கட்சிகளையும் போராட்டத்தில் கலந்துகொண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் வென்றிட துணை நிற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் என்பது, விவசாயிகளின் குரலைக் கேட்காமல் இருக்கும் த.வெ.க. அரசின் கவனத்தை ஈர்க்கும் முதல்கட்ட நடவடிக்கைதான். அரசின் இந்த மெத்தனப்போக்குத் தொடர்ந்தால், மிகப்பெரிய போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதையும் எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
